பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ராவும், அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோனசும், கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து கணவர் நிக் ஜோனசுடன், பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் குடியேறினார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் புதிய வீடு வாங்க வேண்டும் என விருப்பம் கொண்டனர் பிரியங்கா சோப்ரா தம்பதியர். கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே நவீன வசதி கொண்ட புதிய வீட்டை வலைவீசி தேடினர்.
இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் என்சினோ பகுதியில், நவீன வசதிகள் கொண்ட சொகுசு வீட்டை பிரியங்கா தம்பதியர் வாங்கியுள்ளனர். பல வசதிகள் கொண்ட இந்த வீட்டின் மதிப்பு 20 மில்லியன் டாலர் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் வெறும் 144 கோடி ரூபாய் தான்…
20 ஆயிரம் சதுரஅடி கொண்ட இந்த பிரம்மாண்ட சொகுசு வீட்டில், 7 படுக்கை அறைகள், 11 குளியலறைகள், கேமராக்களால் கண்காணிக்கப்படும் கதவுகள், ஆகிய நவீன வசதிகள் உள்ளன.
இதுமட்டுமில்லாமல் கண்ணாடிகள் பதிக்கப்பட்ட உடற்பயிற்சி அறை, நவீன ஹோட்டல்களில் இருப்பது போன்ற மதுபான அறை, கூடைப்பந்து ஆடுகளம், பாதாள வாகன நிறுத்தம் என இன்னும் பல வசதிகள் இடம்பெற்றுள்ளன.
என்சினோ பகுதியில் வீடு வாங்கியதன் மூலம், கால்பந்து வீரர் டுயேன் பிரோன், நடிகர் ஜாய் லாரன்ஸ் உள்ளிட்டோர் பிரியங்கா – நிக் ஜோனஸ் தம்பதியரின் பக்கத்து வீட்டுக்காரர்களாகி உள்ளனர்.