கல்லறையில் இருந்து எழுந்து வருவேன்.. எச்சரித்த லீ குவான்!

 

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பிரிட்டன் தனது காலனிய நாடுகளுக்கு விடுதலை கொடுத்துக் கொண்டு இருந்தது. சூரியன் உதிப்பதும் மறைவதும் எங்கள் சாம்ராஜிய எல்லைக்குள்தான் நடக்கும் என மார்தட்டிக் கொண்ட பிரிட்டன், இப்போது தேய்ந்து தேய்ந்து கட்டெறும்பாக சுருங்கிக் கொண்டிருந்தது. உலகில் புதிய வல்லரசுகள் உதித்தன. போர் பாதிப்பால் பல நாடுகள் நசிந்துபோயின. ரஷியா அதிகப்படியான உயிர்களை போருக்கு பலிகொடுத்திருந்தது. ஜப்பான் மிகப் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இப்படி இரண்டாம் உலகப் போர் உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருந்தது.

இந்தச் சமயத்தில், சிங்கப்பூருக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. மலேசியாவிடம் இருந்து சிங்கப்பூரை பிரித்து தனது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது பிரிட்டன். சிங்கப்பூருக்கென புது ஆளுநர் நியமிக்கப்பட்டார். இன்னொரு பக்கம், போரால் சிதிலமடைந்த சிங்கப்பூர் மீண்டுவர வழி தெரியாமல் முட்டி மோதிக் கொண்டிருந்தது. தன்னை வழிநடத்தப்போகும் தலைவனை தேடி தவமிருந்தது சிங்கப்பூர். இப்படியே சில காலம் உருண்டோடியது. லண்டனில் இருந்து ஒரு வழக்கறிஞர் வந்தார். அவர், மெத்த படித்த சில நண்பர்களுடன் இணைந்து ஒரு கட்சி தொடங்கினார். அவர் சிங்கப்பூரின் தலையெழுத்தையே மாற்றி எழுதப் போகும், பிதாமகன் என அப்போது யாருக்கும் தெரியவில்லை. அந்த வழக்கறிஞரையும் அவரின் கட்சியையும் வெகுமக்கள் கொண்டாடினர். அந்த கட்சி பல சீர்திருத்தங்களைச் செய்து, உலக அரங்கில் சிங்கப்பூருக்கு சிவப்புக் கம்பளம் விரித்தது அந்த கட்சிதான் இன்றுவரை சிங்கப்பூரை ஆண்டு வருகிறது. அந்தக் கட்சியின் பெயர் ‘மக்கள் செயல் கட்சி’. அந்த வழக்கறிஞரின் பெயர் லீ குவான் இயூ.

லீ, செல்வ வளம் மிக்க சீனப் பாரம்பரிய குடும்பத்தில் 1923-ல் பிறந்தவர். லீ குவான் இயூ என்றால் சீன மொழியில், ‘ஒளியும் பிரகாசமும்’ எனப் பொருள். என்னதான் லீயின் தாத்தா பெரும் செல்வந்தராக இருந்தாலும், சிங்கப்பூரின் மந்த நிலை அந்த குடும்பத்தையும் பதம் பார்த்தது. இந்நிலையில், லீ-யை பள்ளியில் சேர்த்தனர் அவரது பெற்றோர். படிப்பில் கெட்டிக்காரராக இருந்தார் லீ. ‘ராபிள்ஸ் பள்ளியின் சிறந்த மாணவன்’ என அப்பள்ளி, லீ-க்கு சான்றிதழ் கொடுக்கும் அளவுக்கு அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கினார். பிறகு, ராபிள்ஸ் கல்லூரியில் சேர்ந்து படித்தார். அடுத்து, சட்டப் படிப்புக்காக லண்டன் (கேம்ப்ரிட்ஜ்) சென்றார். அங்கு தலைவிரித்தாடிய இனவெறி, லீயை அரசியலுக்குள் இழுத்தது. இந்த நிலையில்தான் வழக்கறிஞர் படிப்பை முடித்து சிங்கப்பூர் திரும்புகிறார் லீ.

1952-ல் சிங்கப்பூரே திணறும் அளவுக்கு தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. இது பிரிட்டன் அரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. அப்போது லீ, போராட்டத்துக்கு ஆதரவாக பல உதவிகளைச் செய்தார். அதுபோல், பாதிக்கப்பட்ட பலருக்காக வாதாடி வந்தார். இது சிங்கப்பூர் மக்களிடையே நல்ல பெயரை அவருக்குப் பெற்றுத் தந்தது. அதே நேரம், லீ தனது நண்பர்களுடன் இணைந்து மக்கள் செயல் கட்சி எனும் புதிய கட்சியை 1954-ம் ஆண்டு (PAP) உருவாக்கினார். கட்சி உருவான அடுத்த ஆண்டே சிங்கப்பூருக்கு சட்டசபைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில், லீ-யின் கட்சி மூன்று இடங்களைப் பிடித்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. பிறகு மக்கள் செயல் கட்சிக்கு ஏறுமுகம் தான்.

அடுத்து நடைபெற்ற 1959-ம் ஆண்டுத் தேர்தலில் லீயின் மக்கள் செயல் கட்சி 43 இடங்களைக் கைப்பற்றியது. லீ-யின் அசுர வளர்ச்சி பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தது. ஆனாலும், லீயை பொதுமக்கள் உச்சி முகர்ந்து கொண்டாடினர். அதேநேரம், பிரிட்டன் பிடியில் இருந்து வெளியேற வேண்டும் எனும் பொதுச் சிந்தனை மக்கள் மத்தியில் ஊற்றெடுத்தது. பிரிட்டனின் நியமன ஆளுநருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்கப்பூர் முதல்வருக்கும் மோதல் ஏற்பட்டது. இது ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் மக்களின் விடுதலை உணர்வுக்கு எண்ணெய் ஊற்றியது. இந்நிலையில், 1957-ம் ஆண்டு தன்வசம் இருந்த மலாய் தீபகற்பத்திற்கு பிரிட்டன் விடுதலை கொடுத்தது. இதற்குப் பின் மலாய் தீபகற்பம் ‘மலேயா’ என அழைக்கப்பட்டது. உடனே சுதாரித்த சிங்கப்பூர், விடுதலைக்கான முன்னெடுப்புகளை தொடங்கியது.

பலகட்டப் பேச்சுவார்த்தை, தொடர் அழுத்தம், லீயின் அயராத முயற்சி ஆகியவற்றால் 1959-ம் ஆண்டு சிங்கப்பூர் தன்னாட்சி பெற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூரின் முதல் பிரதமராக லீ குவான் இயூ பதவியேற்றுக் கொண்டார். அப்போது அவருக்கு 36 வயது. சிங்கப்பூரின் புதிய அதிபராக யூசுப் பின் இஷாக் பதவியேற்றார். இவர் மலாயு பத்திரிகையின் நிர்வாகத்தில் இருந்தார். லீயின் நெருங்கிய நண்பரும் கூட. இந்நிலையில், மலாய் கூட்டரசுடன் சிங்கப்பூரை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியது. இணைப்பு நடந்தால் உண்டாகும் நன்மைகள் குறித்து வானொலியில் லீ விளக்கினார். 1963-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி, மலாயா, சாபா, சரவா உள்ளிட்ட நாடுகளை கொண்ட கூட்டரசு உருவானது. அதற்கு மலேசியா எனப் பெயர் வைக்கப்பட்டது. கூட்டரசில் இணைந்தாலும் சிங்கப்பூர் சுதந்திர நாடாகச் செயல்படும் என லீ குவான் அறிவித்தார். இது மலேசிய அதிபர் துங்கு அப்துல் ரகுமானுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

மக்கள் செயல் கட்சியின் அரசு மக்களுக்கான பல திட்டங்களை அறிவித்தது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதே சமயம், மலேசிய பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தனது மேலாதிக்க மனோநிலையை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார். லீ குவான் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் வலம் வருவதை மலேசிய பிரதமரால் தாங்கிக் கொள்ள முடியாவில்லை. இந்நிலையில் தான், சீனர்களுக்கும் மலாய்காரர்களுக்கும் மத்தியில் மிகப் பெரும் இனக் கலவரம் மூண்டது. 1964-ல், பாடாங்கில் உண்டான கலவரம் சிங்கப்பூர் முழுதும் பரவியது. 10 நாட்களுக்கும் மேல் நீடித்த கலவரத்தில், 20-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தக் கலவரம் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான விரிசலை அதிகப்படுத்தியது. ஆனால், லீ குவானின் சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்து செயல்படவே விரும்பியது.

சிங்கப்பூர் மிகச் சிறிய தீவு. தண்ணீருக்குக் கூட அது மலேசியாவையே சார்ந்திருந்தது. பிரதானத் தேவைகளுக்கு மலேசியாவே அதன் நம்பிக்கை. ஆனாலும் பொருளாதாரம் சிறப்பாகவே இருந்தது. இருப்பினும், சிங்கப்பூர் கூடுதல் சுமையென மலேசிய ஆட்சியாளர்கள் கருதினர். எப்படியாவது பாரத்தை இறக்கிவைக்க சமயம் பார்த்தனர். இந்த இனக் கலவரம் அதற்கான வாய்ப்பை உருவாக்கியது. லீ-யின் மக்கள் செல்வாக்கு தமக்கு பாதகத்தை ஏற்படுத்தி விடுமோ எனப் பலர் அஞ்சினர். சிங்கப்பூரை பிரித்து விட வேண்டும் என மலேசிய பிரதமர் கூறினார். லீ எவ்வளவோ முயன்று பார்த்தார். பிரிவினை வேண்டாம் என்று மன்றாடினார். மலேசிய ஆட்சியாளர்கள் பொருட்படுத்தவில்லை.

விளைவு, சிங்கப்பூர் பிரிவினைக்கு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில், சிங்கப்பூர் பிரிந்து செல்ல வேண்டும் என்பதற்கு ஆதரவாக அதிக ஓட்டுகள் விழுந்தன (சிங்கப்பூர் உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை). லீ குவானின் அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. 1965 ஆகஸ்ட் 9-ம் தேதி சிங்கப்பூர் பிரிவதை மலேசிய நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டது. அப்போது, பத்திரிகையாளர்களைச் சந்தித்த லீ, ”இந்தப் பிரிவினை அறிவிப்பை என்னால் தாங்க முடியவில்லை. என் வாழ்க்கை முழுவதும் சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்து இருக்கவேண்டும் என்று எண்ணினேன். பொருளாதாரம், புவியியல் அடிப்படையில் இருதரப்பு மக்களும் ரத்த உறவினர்கள். ஆனாலும், இந்தப் பிரிவு நடந்துவிட்டது” என உடைந்த குரலில் லீ குவான் அறிவித்தார். அப்போது அவரது கண்களில் நீர் கசிந்தது. இரண்டே ஆண்டுகளில் சிங்கப்பூர் தனித்து விடப்பட்டது. வலுக்கட்டாயமாக சிங்கப்பூருக்கு சுதந்திரம் கொடுத்தது மலேசியா.

அண்டை நாடான இந்தோனேசிய ராணுவம் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம், இயற்கை வளங்கள் ஏதுமில்லை, எல்லாவற்றுக்கும் பிற நாடுகளை நம்பியிருக்கும் நிலை என இப்படி நாலா பக்கமும் பிரச்சனைகள் அச்சுறுத்தியது. மீண்டும் பிரதமரான லீ குவான், ஒற்றை மனிதராக மொத்த பாரத்தையும் தன் தோள்களில் தாங்கிக் கொண்டிருந்தார். சில காலம் தூக்கமின்றி அலைந்தார். அடுத்து என்ன செய்வது? இந்தக் கேள்வி லீ-யைத் துரத்தியது. முதலில், சில காலம் எல்லைப் பாதுகாப்புக்கு பிரிட்டனின் ராணுவ உதவியை நாடினார். பிரட்டன் தலையசைத்தது. அதற்குள் உள்நாட்டு ராணுவக் கட்டமைப்பை உருவாக்கி வலுப்படுத்தினார். மலாய், சீனம், தமிழ், ஆங்கிலம் ஆகிவை சிங்கப்பூரின் அரசு மொழியாக அறிவிக்கப்பட்டது. மலேசியாவில் இருந்து பிரிந்த ஆகஸ்ட் 9-ம் நாள், தேசிய நாளாக அறிவிக்கப்பட்டது. அடுத்து, 117-வது நாடாக தன்னை ஐக்கிய நாடுகள் சபையில் சிங்கப்பூர் இணைத்துக் கொண்டது. தன்னை தேய்த்து, சிங்கப்பூரை கட்டியெழுப்பினார் லீ குவான் இயூ.

லீ ஒருமுறை இப்படிச் சொல்லியிருப்பார், “நான் உயிருடன் இருக்கும் வரையில் என் நாட்டை யாரிடமும் விட்டுத் தர மாட்டேன். ஒருவேளை, நான் இறந்த பிறகு என் நாட்டுக்கு ஏதும் ஆபத்து நேரிட்டால், கல்லறையில் இருந்தும் எழுந்து வருவேன்”

*This article owned by our exclusive editor. Permission required for reproduction.