கம்போடியாவில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை அந்நாட்டு அரசின் கலை, பண்பாட்டு உதவியுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
‘கோவையில் இருந்து சிங்கப்பூர் வழியாக வியட்நாமுக்கு விமான சேவை’- ஸ்கூட் நிறுவனம் அறிவிப்பு!
கம்போடியா நாட்டின், சியாம் ரீப் நகரில் செப்டம்பர் 28- ஆம் தேதி முதல் அக்டோபர் 3- ஆம் தேதி வரை உலகத் திருக்குறள் மாநாடு நடைபெறுகிறது. இதன் முதல் நாள் நிகழ்வில், சியாம் ரீப் நகரில் உள்ள அரசின் தலைமைச் செயலகத்தில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டுள்ளது. அங்கோர் தமிழ் சங்கம், விஜிபி உலக தமிழ் சங்கம், கம்போடியா தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில், உலக தமிழ் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசம் திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார்.
கம்போடியாவில் பாரம்பரிய மரியாதை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் சிலைத் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கம்போடியா அரசின் கலை, பண்பாட்டுத்துறை இயக்குநர், ஓய்வுப் பெற்ற நீதிபதி வள்ளிநாயகம், புதுச்சேரி மாநில அமைச்சர் சந்திர பிரியங்கா, அங்கோர் தமிழ் சங்கத்தின் தலைவர் சீனிவாசவராவ், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராஜராஜசோழன், சூரியவர்மன் ஆகியோரது சிலைகளை கம்போடியாவில் திறக்கப்பட உள்ளதாக அங்கோர் தமிழ் சங்கம் தெரிவித்துள்ளது. உலக திருக்குறள் மாநாட்டில் மாணவர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அதேபோல், உலகப் பொதுமறையான திருக்குறள், கம்போடிய அரசின் கெமர் மொழியில் வெளியிடப்படுகிறது. இதற்கான முன்வரைவை கம்போடிய மாநாட்டில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.