சிங்கப்பூர் COVID-19 பரவலை கட்டுப்படுத்த “சர்க்யூட் பிரேக்கர்” என்னும் நடவடிக்கை காலம் ஜூன் 1 வரை, அதாவது நான்கு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் லீ சியென் லூங் (ஏப்ரல் 21) தெரிவித்துள்ளார்.
மேலும் அதிகமான வேலையிடங்களை மூடுவது போன்ற கடுமையான நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்றும் பிரதமர் திரு. லீ தெரிவித்துள்ளார்.
பிரதமர் திரு. லீ, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், சமூகத்தில் கொரோனா வைரஸ் சம்பவங்களின் எண்ணிக்கையை தீர்க்கமாக குறைப்பதே இந்த நடவடிக்கைகளின் நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.
ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்களுக்கும், ஊழியர்களுக்கும் சர்க்யூட் பிரேக்கர் நீட்டிக்கப்படுவது ஏமாற்றமளிக்கலாம் என்றும், மேலும் அவற்றை குறுகிய காலகட்டம் தாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பிரபலமான ஈர சந்தைகள் போன்ற “ஹாட்ஸ்பாட்களில்” அதிக வேலையிடங்களை மூடுவது மற்றும் நுழைவு கட்டுப்பாடுகளை விதிப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகளை சிங்கப்பூர் செயல்படுத்தும் என்றும் திரு. லீ அறிவித்தார்.
அதிரடித் திட்டம் நீட்டிக்கப்படும் வேளையில், நிலைமையைச் சமாளிக்க வர்த்தக நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் அரசாங்கம் தொடர்ந்து உதவும் என்றும் திரு. லீ கூறினார்.
சில பிரபலமான ஈர சந்தைகளில் பெரிய அளவில் குழுக்கள் தொடர்ந்து கூடிவருவதால், பாதுகாப்பான இடைவெளியை கடைப்பிடிப்பது கடினம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும் இந்த இடங்களில் கூட்டத்தை இன்னும் இலேசாக மாற்றுவதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று திரு லீ கூறினார், வார இறுதி நாட்களில் அல்லாமல் வார நாட்களில் சந்தைக்குச் செல்லுமாறு மக்களை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தனது உரையில், உணவு அல்லது அத்தியாவசிய பொருட்களை வாங்குவது போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“நீங்கள் வெளியே செல்ல வேண்டியிருந்தால், முகக் கவசம் அணிந்து கொள்ளுங்கள், ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் மட்டுமே வீட்டிலிருந்து செல்ல வேண்டும் அதுவும் ஒரு முறை,” என்றும் அவர் கூறினார்.