சிங்கப்பூரில் முதன்மை வாய்ந்த இந்திய தொழில்முனைவோரை அங்கீகரிக்கவும் மற்றும் சிங்கப்பூர் இந்திய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் விதமாகவும் சிங்கப்பூர் இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை சபை (SICCI) அதிகாரப்பூர்வமாக தனது விருதை தொழில் முனைவோர் விருதுகள் 2019 என கடந்த திங்கள்கிழமை ஜூலை 22 ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
இந்த SICCI சபை, இந்திய வணிகர்கள் சங்கம் என்று முன்னர் அறியப்பட்டது. இப்போது இந்த அமைப்பு இந்திய வணிகர்களுக்கு பிரதிநிதி அமைப்பாக விளங்குகிறது.
வருகின்ற நவம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ள இந்த விழாவில், 6 விருதுகளில் 3 விருதுகளை பொதுமக்கள் பரிந்துரை செய்யலாம்.
பொதுமக்கள் பரிந்துரைக்காக விடப்பட்ட தொழில் முனைவோர் விருதுக்கு, தனிப்பட்ட நபரின் நிறுவனம் $10 மில்லியன் வெள்ளிக்கு அதிகமான ஆண்டு வருமானம் ஈட்டிருக்க வேண்டும். மேலும், இந்த $10 மில்லியன் வெள்ளி மற்றும் அதற்கு குறைவாக உள்ளவர்களுக்கு நம்பிக்கைக்குரிய தொழில்முனைவோர் விருதும், 18 வயதில் இருந்து 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு “இளம் தொழில்முனைவோர்” விருதும் பரிந்துரைக்கப்படும்.
பரிந்துரை பெறுபவர் கண்டிப்பாக இந்திய வம்சாவளியாக இருக்க வேண்டும், மேலும் சிங்கப்பூரர் அல்லது நிரந்தர குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். சிங்கப்பூர் வணிகத்தில் குறைந்தது 30 சதவீத பங்கைக் கொண்டிருக்க வேண்டும், இவை அனைத்தும் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
பொது பரிந்துரை அல்லாத மற்ற மூன்று விருதுகள், சிறந்த கண்டுபிடிப்பு மற்றும் தொழிற்நுட்ப விருது, Global Presence விருது மற்றும் நிறுவன சமூக பொறுப்புணர்வு சார்ந்த விருது ஆகியவை அடங்கும்.
விருது வழங்கும் குழு வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுத்து இறுதி அறிவிப்பு செய்யும்.
உங்கள் பரிந்துரைகளை ஆன்லைன் மூலமும் செய்யலாம்; www.sicci.com/sicci-entrepreneur-awards-2019 இந்த லிங்கை பயன்படுத்தி வரும் செப்டம்பர் 23 வரை பரிந்துரை செய்யலாம்.
மெரினா பே சாண்ட்ஸில் நடைபெறும் SICCI இன் 95வது ஆண்டு விழாவில் துணை பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் விருதுகளை வழங்குவார்.