ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டம் ஜூலை 9, 10 ஆகிய தேதிகளில் இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக அரசு முறை பயணமாக சிங்கப்பூர் நிதியமைச்சர் லாரன்ஸ்வோங் இத்தாலி சென்றார். அதைத் தொடர்ந்து, வெனிஸில் நடைபெற்ற நிதியமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசினார். மேலும், பல்வேறு நாடுகளின் நிதியமைச்சர்களையும் சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில் ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் (G20 Finance Ministers and Central Bank Governors) உரையாற்றியது குறித்து நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது, “ஜி 20 சர்வதேச கார்ப்பரேட் வரிக்கான (International Corporate Tax) புதிய விதிகள் குறித்த வரலாற்று உடன்பாட்டை எட்டியுள்ளது. ஜி 20 தவிர, சிங்கப்பூர் உட்பட உள்ளடக்கிய கட்டமைப்பில் உள்ள பெரும்பான்மையான அதிகார வரம்புகளும் வரிச் சீர்திருத்தங்களின் பரந்த வடிவத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன. இது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வரி விதிகளில் மிக முக்கியமான மாற்றங்களுடன் வரி முறையின் ஒரு பெரிய மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.
இன்னும் சில பணிகள் செய்யப்பட உள்ளன. மேலும் பல வடிவமைப்பு அளவுருக்கள் செய்யப்பட வேண்டும். அக்டோபர் மாதம் நடைபெற அடுத்த ஜி 20 கூட்டத்தின் மூலம் இந்த வடிவமைப்பு கூறுகளை இறுதி செய்யப்படும் என சிங்கப்பூரும் பல நாடுகளைப் போலவே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.
இன்று ஜி 20 கலந்துரையாடலில், வடிவமைப்பு அளவுருக்களில் கணிசமான பொருளாதார நடவடிக்கைகளை அங்கீகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், பெரிய மற்றும் சிறு பொருளாதாரங்கள் சமமான நிலையில் போட்டியிட அனுமதிக்க சீரான மற்றும் சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் பேசினேன். வரி அமைப்புகள், வருவாயை உயர்த்துவதோடு, புதுமை, வளர்ச்சி மற்றும் வேலைகளைத் தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.