சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.46 லட்சம் மதிப்பு உள்ள தங்கம் கடத்தி வரப்பட்டதை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் வழியாக கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமானப் பயணிகளை தீவிரமாகக் கண்காணித்தனர்.
சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்து இறங்கிய விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் குடியுரிமை சோதனை முடித்து புறப்பட்டனர்.
ஆனால் ஒருவரும் சிக்கவில்லை. இந்த நிலையில் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்திற்குள் சென்று ஒவ்வொரு இருக்கையாக சோதனை செய்தனர்.
கழிவறை சோதனையிட்டபோது அங்கு கேட்பாரற்று ஒரு பொட்டலம் கிடந்தது. அவற்றை பிரித்துப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் ஒரு கிலோ எடை கொண்ட ஒரு தங்கக்கட்டி இருப்பது தெரியவந்தது.
இதன் மதிப்பு சுமார் ரூ.46 லட்சத்து 13,000 ஆகும். இதனை கடத்தியது யார்? கழிவறையில் விட்டுச் சென்றது ஏன்? என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.