சிங்கப்பூர்-திருச்சி இண்டிகோ விமான சேவை 26 நாட்களுக்கு ரத்து!

சிங்கப்பூர்-திருச்சி இண்டிகோ விமான சேவை வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 26 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

திருச்சியிலிருந்து தினசரி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்கூட் மற்றும் இண்டிகோ விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பயணிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இண்டிகோ விமான சேவை சில தொழில்நுட்ப காரணங்களால் வருகிற 1-ந்தேதி முதல் 26 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இண்டிகோ விமான சேவை தினமும் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு மாலை 3:55 மணிக்கு வந்து சேரும், பிறகு மாலை 6:40 மணிக்கு திருச்சியில் இருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பு இண்டிகோ விமான வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.