அதிகமான தேவை இருக்கும் காரணத்தினால், புதிய பாஸ்போர்ட் விண்ணப்பங்களைச் செயல்படுத்த குறைந்தது ஒரு மாதமாவது ஆகும் என்று குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் இன்று (ஏப்ரல் 4) தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் முன்னர், மார்ச் மாதத்திற்கான பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மட்டும் பெருமளவில் வந்து குவிந்ததாக ICA முன்னர் தெரிவித்தது.
ஒவ்வொரு நாளும் சுமார் 6,000 பாஸ்போர்ட் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் வருவதாக கூறிய ICA, கோவிட்க்கு முந்தைய காலத்தில் வரும் தினசரி விண்ணப்பங்களை விட இது மூன்று மடங்கு அதிகம் என்றும் கூறியது.
முன் எப்போதும் நிகழ்ந்திராத வகையில் புதிய பாஸ்போர்ட்க்கான விண்ணப்பங்கள் குவிகின்றன என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அதாவது, சுமார் 1 மில்லியன் பாஸ்போர்ட்டுகள் காலாவதியாகிவிட்டன அல்லது காலாவதியாகி வருகின்றன என்றும் அது கூறியுள்ளது.