சிங்கப்பூரில் இதுவரை இல்லாத பெரிய அலை: டெல்டாவை தட்டி தூக்கும் ஒமிக்ரான் – வெளிநாட்டு பணியாளர்களுக்கு எச்சரிக்கை!

பங்களாதேஷ் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்
(Photo: TODAY)

உலகின் பல்வேறு நாடுகளில் உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. சிங்கப்பூரில் சாதாரண கொரோனா ஒருபுறம்,  ஒமிக்ரான் மறுபுறம் என தொடர்ந்து பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி, கடந்த ஒருவாரத்தில் மட்டும் 1,281 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே 1,048. உள்ளூர் மக்கள் 233 பேர்.

இதன்மூலம் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,250 அளவை தாண்டியுள்ளது. அதிவேகமாக ஒமைக்ரான் பரவி வருவதால் அடுத்த பேரலையை எதிர்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு டெல்டா வகை பரவலின் போது தினசரி தொற்று அதிகபட்சம் 5 ஆயிரம் வரை சென்றது. ஆனால் ஒமிக்ரான் பரவலால் அதிகபட்ச பாதிப்புகள் 15 ஆயிரம் வரை செல்ல வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யே குங்,

டெல்டா வகை வைரஸ் இரட்டிப்பாக 6 முதல் 8 நாட்கள் வரை ஆனது. ஆனால் ஒமிக்ரான் வைரஸ் இரட்டிப்பாக 2 முதல் 3 நாட்கள் மட்டுமே ஆகிறது. எனவே டெல்டா அலையை காட்டிலும் மிகப்பெரிய அலையை ஒமைக்ரான் மூலம் எதிர்கொள்ளப் போகிறோம் என்றார்.

இருப்பினும் போதிய மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் சிங்கப்பூரில் தயாராக உள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி தளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒமிக்ரான் நோயாளிகள் 3 நாட்களில் குணமடைந்து விடுகின்றனர். யாருக்கும் அவசர சிகிச்சை பிரிவுகள் தேவைப்படுவதில்லை.

அதேசமயம் தேவையற்ற சிக்கலை தவிர்க்கும் வகையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் எனவும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.