1819 ஆம் ஆண்டு வாக்கில் சிங்கப்பூரை ராஃபில்ஸ் அமைத்த காலத்தில் இருந்தே இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் நெருங்கியத் தொடர்பு உருவானது.
120 இந்திய சிப்பாய்களும், அவர்களுடன் உதவியாளர்களும், பினாங்கிலிருந்து வந்தனர். நாராயண பிள்ளை என்னும் இந்திய வணிகரும் ராஃபில்சுடன் சிங்கப்பூருக்கு முதன் முதலில் வந்தனர்.
ஆங்கிலேயர்களுடைய ஆட்சி மலேயா தீபகற்பம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் முழுமையாக அமைக்கப்பட்டவுடன், மற்ற அண்டை நாடுகளில் குடியேறியிருந்த தமிழர்களில் பெரும்பான்மையோர் சிங்கப்பூருக்கு வந்தனர்.
சாலைகள் அமைப்பதற்கும், இரயில் போக்குவரத்து அமைப்பதற்கும், துறைமுகத்தை நவீனமாக்கும் பணிகளுக்கும் குறைவான ஊதியத்தில் பணிபுரிவதற்குத் தமிழர்கள் கிடைத்தனர்.
இதுதவிர இரப்பர் தோட்டங்களிலும் தமிழர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். மேலும் 1825 ஆம் ஆண்டு வாக்கில் தமிழ்நாட்டிலிருந்து கைதிகள் கொண்டு வரப்பட்டனர். சிங்கப்பூருடைய வளர்ச்சியில் இவர்களுடைய கடின உழைப்பின் பங்கும் நிச்சயம் உண்டு.
இந்தோனேசியாவில் உள்ள சுமத்ராவில் முதன் முதலில் இவர்கள் வைக்கப்பட்டிருந்தனர்.
அந்தப்பகுதி 1825 ஆம் ஆண்டில் டச்சுக்காரர்களுக்கு உரிமையானதால், தமிழ் குற்றவாளிகள் முதலில் பினாங்கிற்கும், அங்கிருந்து சிங்கப்பூர் மலாக்காப் பகுதிகளுக்கும் மாற்றப்பட்டனர்.
இவ்வாறு சிங்கப்பூருக்கு கொண்டு வரப்பட்ட தமிழர்கள் தமது உழைப்பால் சிங்கப்பூரை உருவாக்கினர்.
அதன் நெடுஞ்சாலைகளை அமைத்துத் தந்ததோடு துப்புரவுப் பணிகளையும் மேற்கொண்டனர். சதுப்பு நிலங்களைத் தூர்த்துப் பாலங்களைக் கட்டி வியர்வை சிந்தி உழைத்தனர்.
சிங்கப்பூரில் உள்ள பழமையான தமிழ் இந்து ஆலயமான மாரியம்மன் கோயிலை இக்குற்றவாளிக் குடியேற்றவாசிகளே அமைத்தனர். சீன நாட்டவரைவிட இவர்கள் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்தனர்.
1867இல் தீபகற்பக் குடியேற்றங்கள் காலனி கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டமையால் குற்றவாளிகளைக் குடியேற்றி அவர்கள் உழைப்பைச் சுரண்டும் போக்கு மாறியது
1800ஆம் ஆண்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சிங்கப்பூருக்கு வந்து குடியேறிய தமிழர் தொகை 1890ஆம் ஆண்டளவில் ஓரளவு பெருகியிருந்தது.
தவிர மலேசியாவிலிருந்தும் தமிழர்கள் சிங்கப்பூருக்கு வந்தனர். 1913ஆம் ஆண்டளவில் தமிழர்களின் மொத்த மக்கள் தொகை மும்மடங்காகப் பெருகியது.
குறிப்பாகச் சிங்கப்பூரில் பணிபுரிபவர்களுக்குச் சில உரிமைகளும், சலுகைகளும் அளிக்கப்பட்டதால் தமிழர்கள் மிகுதியாகச் சிங்கப்பூருக்கு வந்து குடியேறினர்.