ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர் டாக்டர் இயன் சின்க்ளேர் மேற்கொண்ட புதிய ஆய்வு ஒன்றில், அறிஞர்களால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 700 ஆண்டுகளுக்கு பதிலாக, சிங்கப்பூர் 1,000 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
அவர் தனது இந்த கண்டுபிடிப்பை, இந்த மாத தொடக்கத்தில் (டிசம்பர் 7) சிங்கப்பூர் இந்திய பாரம்பரிய மையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.
டாக்டர் சின்க்ளேர் கடந்த அரை வருடமாக, சிங்கப்பூர் கல் குறித்து ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த ‘சிங்கப்பூர் கல்’ உண்மையில் சிங்கப்பூர் ஆற்றின் முகப்பில் பல ஆண்டுகளாக இருந்த ஒரு கற்பாறை என்றும், 1843 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் ஆற்றில் பயணிக்கும் படகுகளுக்கான வழியை அகலப்படுத்த ஆங்கிலேயர்கள் அதை அகற்றியதாகவும் கூறப்படுகிறது.
இந்த கற்பாறையில் செதுக்கப்பட்ட பழங்கால கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. ஆங்கிலேயர்கள் அதை வெடிக்கச்செய்து அகற்றியபோது, அதில் ஒரு துண்டு கல் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.
டாக்டர் சின்க்ளேர் அவர்களால் அந்த கல்வெட்டுகளில், “கேசரிவா” என்ற சொற்றொடரை “பராகேசரிவர்மன்” என்ற வார்த்தையின் ஒரு பகுதி என்று அடையாளம் காண முடிந்தது.
மேலும், இது இந்தியாவில் தமிழ் சோழ வம்சத்தின் பல மன்னர்கள் பயன்படுத்திய தலைப்பு என்றும் கூறியுள்ளார்.
“சிங்கப்பூருடன் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழ் தொடர்புகளை இது அறிவுறுத்துகிறது. மேலும் 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அந்த கற்பாறை உருவாக்கியிருக்கலாம்” என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
Source : The Online Citizen