ராஞ்சியிலிருந்து புறப்பட்ட டெல்லியை சேர்ந்த இளைஞர் ஹிமான்ஷூ கோயல் 55 நாட்களில் 6000 கிலோ மீட்டர்கள் பயணித்து சிங்கப்பூர் சென்றுள்ளார். அதுவும் சாதாரண சைக்கிளில் பயணித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளதுதான் ஆச்சரியம்.
இதில் குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், இதற்காக அவருடைய இறுதி ஆண்டு Chartered Accountants தேர்வையே தள்ளி வைத்துள்ளார்.
ஹிமான்ஷூ சாதாரண சைக்கிளை எடுத்துச் சென்றதால் அதிக லக்கேஜுகளை சுமந்து செல்லவில்லை. எது தேவையோ அதை மட்டுமே எடுத்துச் சென்றுள்ளார்.
டிராவல் பையில் காற்றடிக்கும் பம்ப், பஞ்சர் பொருட்கள். முதலுதவிப் பெட்டி, கொஞ்சம் துணிகள், தண்ணீர் பாட்டில், ஃபோன், ஸ்லீபிங் பேக் மற்றும் கூடாரம் அமைக்கும் பேக். இவற்றை மட்டுமே உடன் எடுத்துச் சென்றுள்ளார்.
55 நாட்களில் ராஞ்சியிலிருந்து சிங்கப்பூர் பயணித்த ஹிமான்ஷூ ஒரு நாளைக்கு 150 கிலோ மீட்டர் வரை சைக்கிள் ஓட்டுவாராம். அவருக்கு எந்தவித ஸ்பான்ஸர்களும் இல்லாததால் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள வீடுகளில் இடம் கேட்டு இரவை கழித்துள்ளார்.
இந்த பயணத்திற்கு முன் ஹிமான்ஷூ மணாலியிலிருந்து லடாக் வரை ஆறு நாட்கள் பயணம் செய்துள்ளார். மேலும், இந்த பயணத்தில் திரிபுரா, அஸ்ஸாம், மணிபூர், பங்களாதேஷ், மியான்மர், தாய்லாந்து, மலேசியா பின் சிங்கப்பூரை அடைந்துள்ளார்.
இவரின் இந்த வெற்றி அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. வழிகளில் நிறைய சவால்களை சந்தித்துள்ளார். அஸ்ஸாம் சென்ற போது கார் உரசியதால் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து தோல்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அதற்கு தானே மருந்து போட்டுக்கொண்டு 80 கிலோ மீட்டர் வரை சைக்கிளை ஓட்டியுள்ளார்.
பின் மலேசியாவில் கோவில்களை சுற்றிப்பார்க்க சென்றபோது அங்கிருந்த உள்ளூர் இளைஞர்களால் பிரச்னைகளை சந்தித்துள்ளார். இப்படி பல பிரச்னைகளை சந்தித்த பின்னரே இலக்கை ருசித்துள்ளார் ஹிமான்ஷூ. அடுத்து அவருடைய இலக்கு இந்தியாவிலிருந்து ஐரோப்பா வரை செல்வதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.