கடந்த ஜூன் 15- ஆம் தேதி அன்று நடைபெற்ற ஐ.நா. குளோபல் காம்பாக்ட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் (UN Global Compact Leaders Summit 2021-‘UNGC’) கலந்துக் கொண்ட சிங்கப்பூர் நாட்டின் அதிபர் ஹலிமா யாக்கோப் காணொளி மூலம் உரையாற்றினார்.
இது தொடர்பாக சிங்கப்பூர் அதிபர் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “2030- ஆம் ஆண்டிற்குள் மாநாடு திட்டமிட்டுள்ள இலக்குகளை எட்டுவதற்கு இன்னும் 10 ஆண்டுகளே உள்ளன. நீடித்த நிலைத்தன்மை வாய்ந்த எதிர்காலத்தில் உடனடியாக அடியெடுத்து வைக்க வேண்டும். இந்த ஐ.நா குளோபல் காம்பாக்ட் தலைவர்கள் உச்சி மாநாடு 2021, லட்சியத்தை உயர்த்துவதன் மூலமும், நடவடிக்கைகளைத் தூண்டுவதன் மூலமும், முடிவுகளை வழங்குவதன் மூலமும் அதைச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் பசுமை பொருளாதாரத்திற்கு மாறுவதற்கு சிங்கப்பூர் பின்பற்றும் உத்திகளை நான் எடுத்துரைத்தேன்.
முக்கிய துறைகளில மாற்றம் செய்வதன் மூலம் எரிச்சக்தியை மிச்சப்படுத்தி கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க முடியும். சிங்கப்பூரில் எங்கள் முக்கிய துறைகளை அதிக ஆற்றல் மிக்கதாக மாற்றுவதற்கும், பசுமை, நிலையான பத்திரங்கள் மற்றும் கடன்களுக்கான மானியம் மூலம் பசுமை திட்டங்களுக்கான நிதியுதவி திட்டங்களுக்கு ஆதரவளிப்பது, பசுமை பொருளாதாரத்தில் புதிய துறைகளை வளர்ப்பதாகும். வணிகங்களின் நிலையான தன்மை, வளர்ச்சி மற்றும் புதிய வேலை வாய்ப்பு உருவாக்கத்திற்கான புதிய வாய்ப்புகளாக இருக்கும் என நம்புகிறேன். ஐ.நா. குளோபல் காம்பாக்ட் எடுக்கும் முயற்சிகளுக்கு சிங்கப்பூர் தனது ஆதரவைத் தொடர்ந்து வழங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.