ஆந்திரப் பிரதேசத்தின் புதிய நகரமாக அமைய இருந்த அமராவதி மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து நிதி உதவி தர மறுத்து ஒதுங்கிய உலக வங்கி.
ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் தனியாக பிரிந்ததால் அமராவதி என்ற இடத்தில் ஆந்திராவின் தலைநகர் கட்டமைப்பதற்கு முந்தைய முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் திட்டம் தீட்டப்பட்டது.
இதனை அடுத்து, இந்தத் திட்டத்திலிருந்து விலகுவதாகத் தனது அதிகாரபூர்வ இணையத்தளத்தில் அறிவித்த உலக வங்கி, தனது முடிவுக்கான காரணத்தை விளக்கவில்லை.
இது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் வங்கி பதிலளிக்கவில்லை, என்று என்டிடிவி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஆந்திராவின் முன்னைய மாநில நிர்வாகத்தின்போது அமராவதி திட்டத்திற்காகத் தங்களது நிலங்கள் பறிக்கப்பட்டதாக விவசாயிகள் சிலர் புகார் கொடுத்துள்ளதை உலக வங்கி கருத்தில் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அமராவதி திட்டத்திற்காக உலக வங்கி கொள்கையளவில் ஒரு பில்லியன் டாலர் கடன் கொடுக்க சம்மதித்ததாக ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னதாகத் தெரிவித்தார்.
இதற்கு தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி என்ன மாற்று ஏற்பாடு செய்வார், இதை எப்படி சமாளிப்பார் என்று ஆந்திர அரசியலில் கேள்விகள் எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது