திருமணம் செய்ய மறுத்து சிங்கப்பூருக்கு சென்ற காதலனை கரம் பிடித்த இளம்பெண் – இறுதியில் நடந்த டுவிஸ்ட்!

மதுரை மாவட்டம் மணப்பட்டியை சேர்ந்த மலைச்சாமி என்பவரின் மகள் ரம்யா. வயது 22. பக்கத்து ஊரான கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் அழகுராஜா.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். கடந்த 2017-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டு காதலானது.

ரம்யாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி அழகுராஜா அவரிடம் பழகி வந்துள்ளார். அதனை தொடர்ந்து அழகுராஜா சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

2019-ம் ஆண்டு சிங்கப்பூரில் இருந்து அழகுராஜா கோட்டைப்பட்டிக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது ரம்யா அவருடைய பாட்டி காந்திமதியுடன் கோட்டைப்பட்டிக்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அழகுராஜாவிடம் கேட்டுள்ளார்.

அப்போது வாய்த்தகராறு ஏற்பட்டு ரம்யா தரப்பினரை தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து கொட்டாம்பட்டி போலீசில் அழகுராஜா மீது ரம்யா புகார் அளித்தார்.

இதன் பேரில் அழகுராஜா கைதாகி சிறைக்கு சென்றார். பின்னர் நிபந்தனை ஜாமீனில் வந்து கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வந்தார்.

இதற்கிடையே அழகுராஜா மீண்டும் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றுவிட்டார். சென்னையில் கைது அதனை தொடர்ந்து அழகுராஜா மீது லுக்-அவுட் நோட்டீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த மாதம் இந்தியா வந்த அழகுராஜா மீண்டும் கைது செய்யப்பட்டு, மேலூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் பின்னர் ஜாமீனில் நேற்று வெளியே வந்த அழகுராஜா, தான் காதலித்த ரம்யாவை சிறை வளாகத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் தாலிக்கட்டி திருமணம் செய்துகொண்டார்.