10 வருடங்களுக்கு முன்பு வரை கிரிக்கெட்டில் கத்துக்குட்டி அணியாக வலம் வந்துக் கொண்டிருந்த வங்கதேச கிரிக்கெட் அணியின் வளர்ச்சி இன்று வார்த்தைகளால் அடக்கிவிட முடியாதவை. உலகில் எந்த இடத்திற்கு சென்றாலும், எந்த அணியாக இருந்தாலும் வீழ்த்தும் திறன் படைத்த அணியாக உருவெடுத்து இருக்கிறது.
கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் வங்கதேசம் அடைந்த படிப்படியான வளர்ச்சி குறித்தும், நடப்பு உலகக் கோப்பையில் அவர்கள் எப்படி விளையாடப் போகிறார்கள் என்பது குறித்தும் இங்கே பார்ப்போம்,
அங்கீகாரம்
வெஸ்ட் இண்டீஸில் நடந்த 2007 உலகக் கோப்பை தான் அவர்களது அடையாளம், அங்கீகாரம் எனலாம். அவர்கள் அந்த அங்கீகாரத்திற்கு பயன்படுத்திக் கொண்ட நாடு இந்தியா. லீக் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி, உலகின் மற்ற அணிகளை திரும்பிப் பார்க்க வைத்தது வங்கதேசம். அந்த தொடரில் சூப்பர் 8 வரை முன்னேறியது. இந்தியாவையும் வெளியேற்றியது.
அனுபவம்
அடுத்து, ஆசிய கண்டத்தில் நடைபெற்ற 2011 உலகக் கோப்பையில், அவர்கள் ஆக்ரோஷமாக விளையாடினார்களே தவிர, அனுபவமின்மையால் பல போட்டிகளை கோட்டை விட்டார்கள். தங்களுக்கு சாதகமான தருணங்களை வெற்றியாக மாற்றத் தெரியாமல் தடுமாறினார்கள். அந்தத் தொடரில் முதல் சுற்றோடு வெளியேறினாலும் படிப்பினைகளை கிலோ கணக்கில் கற்றுச் சென்றனர்.
அபாரம்
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடந்த 2015ம் ஆண்டு உலகக் கோப்பையில் அவர்களது ஆட்டம், மற்ற அணிகளை மிரள வைத்தது. முதல் சுற்றில் இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற அசுர பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் இந்திய ரசிகர்களை கதி கலங்க வைத்து தான் தோற்று வெளியேறியது. வங்கதேசத்திடம் இருந்து இப்படியொரு ஆட்டத்தினை, இப்படியொரு கண்டிஷனில் யாருமே எதிர்பார்க்கவில்லை.
அடுத்து?…. (நாளை பார்ப்போம்)