இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நேற்று நடந்த முதல் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக குல்தீப் யாதவுக்கு பதிலாக சாஹல் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.
நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. ராஸ் டெய்லர் 67 ரன்களுடனும் விக்கெட் கீப்பர் டாம் லாதம் 3 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.
தொடர்ந்து மழை பெய்ததால், போட்டி இன்று Reserve Day எனும் மாற்று நாளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த உலக கோப்பையில் அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு மட்டும் மாற்றுநாள் (ரிசர்வ் டே) வைக்கப்பட்டுள்ளது. இதன்படி மழையால் பாதிக்கப்பட்ட இந்த அரை இறுதி ஆட்டம் மாற்று நாளான இன்று நடைபெறும். இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இன்றைய நாளில் நியூசிலாந்து அணி அதே நிலையில் இருந்து (211-5 ரன்) எஞ்சிய 23 பந்துகள் பேட்டிங் செய்யும். அதன் பிறகு இந்திய அணி சேஸிங் செய்யும்.
இன்றும் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒருவேளை இன்றும் ஆட்டத்தை பாதியில் கைவிட நேர்ந்தால், லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்றதன் அடிப்படையில் இந்தியாவுக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும். நியூசிலாந்து உலகக் கோப்பையில் இருந்து வெளியேறும்.