தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த செல்லப்பன் ராமநாதன் என்ற எஸ். ஆர். நாதன், 1924 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி சிங்கப்பூரில் பிறந்தார். இவர் தமிழ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.
திரு. எஸ்.ஆர். நாதன் அவர்கள் 1955ஆம் ஆண்டு மருத்துவ சமூக சேவகராக சிங்கப்பூர் சிவில் சேவையில் தனது முதல் தொழிலைத் தொடங்கினார்.
பிறகு அரசுத் துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இவர் திறம்பட பணியாற்றினார். அதன்பின் அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர் என்ற மிக உயர்ந்த பதவிகள் உட்பட பல்வேறு உயர் பதவிகளை வகித்தார்.
அதன் பின்னர் 1999 ஆம் ஆண்டு சிங்கப்பூர் அதிபராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.ஆர். நாதன் அவர்கள் பதவியேற்ற போது உலகம் முழுவதும் பொருளாதார தேக்க நிலை நிலவியது.
பொருளாதார தேக்க நிலையில் இருந்து சிங்கப்பூரை மீட்டு வளர்ச்சிப் பாதையின் பக்கம் வழிநடத்தி அழைத்து சென்றார். இந்த மாபெரும் முயற்சியின் காரணமாக 2005 ஆம் ஆண்டில் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
எஸ். ஆர். நாதன் அவர்கள் அதிபராவதற்கு முன்னாள் பொதுச் சேவை, உளவு, பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை ஆகிய துறைகளில் மிக முக்கிய பதவிகளை வகித்தார்.
சிங்கப்பூரின் அதிபராக தொடர்ந்து 12 ஆண்டுகள் சிறப்பான முறையில் சேவையாற்றிய பிறகு 2012 ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி அன்று பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். சுமார் 4382 நாள்கள் சிங்கப்பூர் அதிபராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வம்சாவளியில் சிங்கப்பூர் ஜனாதிபதியாக உயர்ந்த எஸ்.ஆர் நாதன் 92 வது வயதில் பக்கவாதம் ஏற்பட்டதன் காரணமாக சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு சிகிச்சை பலனின்றி 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி உயிரிழந்தார்.
எஸ். ஆர். நாதன் அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்து செல்கையில் தனது மனைவி, மகன், மகள் மற்றும் 3 பேரக் குழந்தைகளை விட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.