சிங்கப்பூரில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டுகளில் விதிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாட்டு ஊழியர்கள் பொது இடங்களுக்கு செல்ல இயலாமல் பெரிதும் பதிப்படைந்தனர்.
இந்த நிலையில், வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் COVID-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் சமீபத்திய சமூகக் கட்டுப்பாடுகளுடன் சேர்த்து தற்போது ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது. இன்று (மார்ச் 15) முதல் தங்கும் விடுதிகளில் வசிக்கும் அதிகமான ஊழியர்கள் சமூக இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் காரணமாக பெரிதும் பாதிப்படைந்த வெளிநாட்டு ஊழியர்களில் ஒரு சிலருக்கு, கூசுத் (Kusu) தீவிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் ஃபாஸ்ட் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் உட்பட 51 பேர் கூசுத் தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
உட்லண்ட்ஸ், நார்த் கோஸ்ட் உள்ளிட்ட தங்குவிடுதி ஊழியர்கள் இதில் கலந்துகொண்டனர். கடந்த ஜனவரி 30ம் தேதி காலை முதல் பிற்பகல் வரை அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். கூசுத் தீவிலுள்ள இயற்கை காட்சிகள், கடற்கரைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கண்டுகளித்தனர்.
சிங்கப்பூரில் இன்று முதல் வந்துள்ள அதிரடி மாற்றங்கள்; அனைத்தும் ஒரே பதிவில் – வாங்க பார்ப்போம்!
இதற்கிடையில், ஊழியர்களுடன் சென்றிருந்த மனிதவள அமைச்சக அதிகாரிகள் தங்கள் வீட்டில் செய்து வைத்திருந்த தின்பண்டங்களை அவர்களுக்கு பகிர்ந்தளித்தனர். அனைவரும் ஒன்றாக மதிய உணவு சாப்பிட்ட பின்னர் விளையாட்டுகளில் ஈடுபட்டனர்.
சிங்கப்பூரின் பழங்கால வரலாறு பற்றி மேலும் தெரிந்துகொள்ளும் இதுபோன்ற வாய்ப்பு எங்களுக்கு அதிகம் கிடைப்பதில்லை என்றும், அங்குள்ள சீனக் கோயில்களை கண்டு ரசித்ததாகவும், தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழகத்தின் நாகப்பட்டினத்தை சேர்ந்த கட்டுமான ஊழியர் ஒருவர் கூறினார்.
வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த தாம் அனைவரும் அன்புடன் பழகியது மிகவும் பிடித்திருந்ததாக சிங்கப்பூரில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த மற்றொரு ஊழியர் குறிப்பிட்டார்.
மேலும், சிங்கப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக நீடித்துள்ள நடமாட்டக் கட்டுப்பாடுகள் சங்கடத்தை ஏற்படுத்தி இருந்தாலும், இத்தகைய சிறிய நடவடிக்கைகளின் மூலம் அரசு தங்கள் மீது கொண்டுள்ள அக்கறையை உணர்த்துவதாகவும் அவர் கூறினார்.
வெளிநாட்டு ஊழியர்கள் அனைவருக்கும் படகுப் பயணத்துக்கான நுழைவுச் சீட்டுகளை சிண்டோ பயணக் கப்பல் நிறுவனம் இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தகக்கத்து.