மத்திய தாய்லாந்தின் காவ் யாய் தேசிய பூங்காவில் செங்குத்தான நீர்வீழ்ச்சியின் கீழே மேலும் ஐந்து காட்டு யானைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
இந்த நீர்வீழ்ச்சியில் மொத்தம் 11 யானைகள் விழுந்து இறந்ததாக ஆளில்லா வானூர்திப் படங்கள் காட்டுகின்றன. இந்தச் சம்பவத்தில் இறந்த யானைகளின் எண்ணிக்கை முன்னதாக ஆறு எனப் தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனால், கடந்த வாரயிறுதியின் போது தாய்லாந்தின் வடகிழக்கிலுள்ள ஹுாவ் நரோக் நீர்வீழ்ச்சியில் ஆறு யானைகள் விழுந்து மடிந்ததாக தேசிய பூங்காக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த யானைக் கன்று ஒன்றுக்கு ஆற்றங்கரையில் இருந்த இரண்டு யானைகள் நீருக்குள் இறங்கி உதவ முயன்றபோதும் முடியவில்லை . அந்த யானைகள் அதிஷ்டவசமாக உயிர்பிழைத்தன.
ஆளில்லா வானூர்தி ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட படங்களில் மேலும் ஐந்து யானைகளின் சடலங்கள் தென்பட்டதாக நகோன் நயோக் மாநில ஆளுநர் நுட்டாபோங் சிரிசனா தெரிவித்தார். ஆற்று நீரோட்டம் மிகவும் பலமாக இருப்பதால் தாங்கள் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் செல்ல இயலவில்லை என அவர் கூறினார்.