உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகளில் பள்ளி விடுமுறை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எனவே,இரண்டு சோதனைச்சாவடிகள் வழி பயணம் மேற்கொள்பவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே,முடிந்தவரை விடுமுறை போன்ற உச்சநேரத்தில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு கூறப்பட்டுள்ளது.
உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் தற்போதைய போக்குவரத்து, கோவிட்-19 தொற்றுக்கு முன்பு இருந்த நிலையில் சுமார் 80 சதவீதம் திரும்பியுள்ளதாக குடிவரவு,சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.
இந்த மாதம் 4ஆம் தேதிக்கும் 6ஆம் தேதிக்கும் இடையில் இரு சோதனைச்சாவடிகளையும் சுமார் பத்து லட்சம் பயணிகள் வரை கடந்திருப்பதாக ஆணையம் தெரிவித்தது.
இம்மாதம் 17ஆம் தேதி முதல் ஜனவரி 2 வரை போக்குவரத்து நெரிசல் கடுமையாகலாம் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.கடந்த 2019 ஆம் ஆண்டு பள்ளி இறுதி விடுமுறைக் காலத்தின் போது,சோதனைச்சாவடிகளைக் கடந்து சென்றோர் சுமார் 3 மணி நேரம் காத்திருந்தனர் என்பதையும் ஆணையம் குறிப்பிட்டது.
இது போன்ற சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதைத் தவிர்க்க,பயணத்தை விவேகமாக திட்டமிடுமாறு ஆணையம் கேட்டுக்கொண்டது.