இந்திய அரசு விடுத்த அழைப்பின் பேரில் சிங்கப்பூரின் பிரதமர் அலுவலகத்துறை அமைச்சரும், கல்வி, வெளியுறவுத்துறைக்கான இரண்டாவது அமைச்சருமான டாக்டர் முகமது மாலிக்கி ஓஸ்மான் (Minister in the Prime Minister’s Office, Second Minister for Foreign Affairs and Second Minister for Education Dr Mohamad Maliki Osman) மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, கடந்த ஜூன் 11- ஆம் தேதி அன்று இந்தியாவுக்கு சென்றார்.
சேதமடைந்த அரசுப் பள்ளி…ரூபாய் 1 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டித் தந்த சிங்கப்பூர் சகோதரர்கள்!
முதலில் தலைநகர் டெல்லிக்கு சென்ற அமைச்சருக்கு சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து, அங்கிருந்து வாரணாசிக்கு சென்ற அமைச்சர் டாக்டர் முகமது மாலிக்கி ஓஸ்மான், ஜி20 நாடுகளின் மேம்பாட்டுத்துறை அமைச்சர்களின் கூட்டத்தில் (G20 Development Ministers’ Meeting) கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில், ஓமன், சவூதி அரேபியா, ஐக்கிய அரசு அமீரகம், வங்கதேசம் ஆகிய நாடுகளின் அமைச்சர்களைத் தனித்தனியே நேரில் சந்தித்து, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தினார்.
அந்த வகையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரைச் சந்தித்த அமைச்சர் டாக்டர் முகமது மாலிக்கி ஓஸ்மான், “ஜி20 அமைச்சர்கள் கூட்டத்தில் சிங்கப்பூருக்கு முன்னுரிமை கொடுத்ததற்கும், கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததற்கும் நன்றி” தெரிவித்துக் கொண்டார். மேலும், சர்வதேச சோலார் கூட்டமைப்பில் சிங்கப்பூர் இணைவதற்கான கடிதத்தையும், இந்திய அமைச்சரிடம் வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக, உத்தர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தையும் நேரில் சந்தித்த சிங்கப்பூர் அமைச்சரிடம், தொழில் முதலீடுகள், வேலைவாய்ப்பு குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்வின் போது, இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதரக உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஜூன் 11- ஆம் தேதி முதல் ஜூன் 13- ஆம் தேதி வரை நடைபெற்ற ஜி20 நாடுகளின் மேம்பாட்டுத்துறை அமைச்சர்களின் கூட்டத்தில் (G20 Development Ministers’ Meeting), சர்வதேச பொருளாதாரம், சுற்றுச்சூழல் பாதிப்பு, கடன் நெருக்கடிகள், தகவல் தொழில்நுட்பம், புதிய தொழில்நுட்பங்கள், பருவநிலை மாற்றங்கள் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டது.