போலிச் செய்திகள் பரவுவதைத் தடுப்பதில் அரசாங்கங்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
ஆனால், பொய்யானவற்றின் நடுவர்களாக மட்டுமே அவைகள் இருக்கக்கூடாது, என்றும் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 44வது அதிபரான ஒபாமா, மில்லினியா சிங்கப்பூரின் தி ரிட்ஸ்-கார்ல்டனில் அறப்பணி விருந்து ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றினார். அச்சமயம் இந்த கருத்துக்களை அவர் தெரிவித்தார்.
சமூக ஊடக நிறுவனங்களை பற்றி பேசிய அவர், “எந்த தகவலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், மக்கள் எதைப் பார்க்க வேண்டும்” என்பதைத் தேர்ந்தெடுப்பதில் அவர்களும் முக்கியமான பங்கு இருப்பதாக கூறினார்.
மேலும், பொய்ச்செய்திகளை அடையாளம் கண்டு அவற்றை தடுப்பது ஒரு சவால் என்றும் குறிப்பிட்டார்.
ஒரு செய்தி உண்மையா, பொய்யா என்பதை முடிவு செய்வதில் நீதித்துறையும் இதர அமைப்புகளும் பங்காற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
வசதி குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கும் சமூகத்தில் பாதிக்கப்பட்டு உள்ள பெண்களுக்கும் கல்வி, பயிற்சி உதவிகளை வழங்கும் சிங்கப்பூரின் நான்கு அறப்பணி அமைப்புகளுக்கு நிதி திரட்டி உதவுவதற்காக சனிக்கிழமை அந்த விருந்து நிகழ்ச்சி இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதற்கு முன்னதாக ஒபாமா, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கைச் சந்தித்தார் என்பதும் கூடுதல் தகவல்.