முதலில் டெங்குவை உருவாக்கும் கொசுக்களை ஒழிக்காதவரை, டெங்கு வைரஸில் இருந்து யாரும் தப்ப முடியாது. இதை நினைவில் கொண்டு சிங்கப்பூரின் ஆய்வாளர்கள் குழுவுக்கு, உதித்தது அந்தப் புதிய திட்டம்.
இதில் பெண் கொசுக்களை மட்டுமே மனிதர்களை கடிக்கும், இதன் மூலமாகவே பெரும்பாலான வைரஸ் நோய்கள் பரவுகின்றன.
இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள தேசியச் சுற்றுச்சூழல் நிறுவனம், `Project Wolbachia Singapore’ எனும் பெயரில் இதற்கான ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம், ஒரு வகையான ஆண் கொசுவை உற்பத்தி செய்து, அதை ஏடிஸ் பெண் கொசுவுடன் இணைசேர வைத்தது.
இதனால், ஏடிஸ் பெண் கொசு இனப்பெருக்கம் செய்யும் சக்தியை இழந்துவிடும். எனவே, ஏடிஸ் கொசுக்களின் பெருக்கம் தடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் இந்த நல்ல ஆண் கொசுக்கள் மனிதர்களைக் கடிக்காது.
தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில், இக்கொசுக்களைப் பரவலாக விட்டு, பலகட்ட ஆராய்ச்சிகளின் முடிவில் 90% வெற்றிபெற்றிருக்கிறது, சிங்கப்பூரின் இந்த ஆய்வாளர்கள் குழு. இதையடுத்து, இந்த நல்ல கொசுக்களின் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கத்தில், சிங்கப்பூரில் ‘கொசு உற்பத்தி தொழிற்சாலை’ தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் மூலம், கேடு விளைவிக்கும் கொசுக்களின் இனப்பெருக்கம் முடக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நல்ல மற்றும் கெட்ட கொசுக்கள் அனைத்தும் அதன் வாழ்நாள் முடிந்ததும் இயற்கையாகவே இறந்துவிடும்.
எனவே, தற்போது சிங்கப்பூர் மக்கள் டெங்கு மற்றும் கொசுக்கள் இல்லாத வருங்காலத்தை எதிர்நோக்கி மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறார்கள்.