Gold from singapore | வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்பட்டு விமான நிலையத்தில் சிக்கிய செய்தியை தினம் தினம் கேள்விப்பட்டிருப்போம். எதற்காக நகையை மறைத்து எடுத்து வர வேண்டும்? அப்படி கஷ்டப்பட்டு வெளிநாட்டில் இருந்து கொண்டுவருவதற்கு பதிலாக நம்ம ஊரிலேயே வாங்கிக்கொள்ளலாமே? என்ற சந்தேகம் வரலாம்.
சில மக்கள் தெரியாமல், அளவுக்கு மேல் அணிந்து வந்து மாட்டிக்கொள்கின்றனர். ஒரு சிலர் கடத்தும் நோக்கத்தில், பதுக்கி வந்து சிக்கிக்கொள்கின்றனர். எதையும் முறைப்படி செய்தால், எந்த சட்ட நடவடிக்கையும் நம் மீது பாயாது.
அதனோடு இலாபமும் ஈட்ட முடியும். வெளிநாடு வேலைக்கு செல்லும் போது, அங்கு குறைவான விலையில் தங்கம் வாங்கி, ஊருக்கு வரும் போதெல்லாம் அணிந்து வந்து, அதில லாபம் கண்ட பலரைக்காண முடியும்.
அதற்கு முதலில் எவ்வளவு நகை அணிந்து வரலாம்? எந்த அளவுக்கு மேல் சென்றால் வரி கட்ட வேண்டும்? என்கிற விவரம் தெரிந்தால் சிக்கலே வராது.
ஒரு ஆண் வெளிநாட்டில் இருந்து வருகிறார் என்றால் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகையை அணிந்து வரலாம். அதுவே பெண் என்றால், அதிகபட்சம் ஒரு இலட்சம் ரூபாய் மதிப்பிலான நகையை அணிந்து வரலாம். இதற்கு வரி செலுத்த தேவையில்லை.
வெளிநாட்டில் ஆறு மாதத்திற்கு மேல் தங்கியிருந்து இந்தியா வரும்போது நகை வாங்கி வந்தால், இறக்குமதி வரி 12.5% ஆகவும், ஜி.எஸ்.டி 3 சதவிகிதமாகவும் இருக்கும். அதுவே வெளிநாடு சென்று ஆறு மாதத்திற்கு முன்னதாகவே திரும்பி வரும் போது நகை வாங்கி வந்தால், அதற்கு 36 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்படும்.
அடிக்கடி வெளிநாடு சென்று குறைந்த விலையில் நகை வாங்கி, இந்தியாவில் அதிக விலைக்கு விற்று மோசடி செய்வதை தடுக்க இந்த முறை கொண்டுவரப்பட்டிருக்கிறது.
வரி செலுத்த விரும்பினால், ஒரு நபர் அதிகபட்சமாக ஒரு கிலோ வரைக்கும் தங்க நகைகளை வெளிநாட்டில் இருந்து வாங்கி வரலாம். அதற்கு மேல் தங்கம் கொண்டு வர வேண்டி இருந்தால், இறக்குமதி படிவம் எல்லாம் கொடுத்து அனுமதி வாங்க வேண்டிய நிலை வரும்.
கொண்டுவரப்படும் தங்கம், நாணயமாகவோ அல்லது பிஸ்கட்டுகளாகவோ இருந்தால், வரி விலக்கு கட்டாயம் கிடையாது. நகையாக அணிந்து வந்தால் மட்டுமே, ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் சலுகை கிடைக்கும்.