மலேசியா கோழி ஏற்றுமதித் தடையை கடந்த ஜூன் மாதம் அறிவித்தது.சிங்கப்பூரின் கோழி விநியோகம் பாதிக்கப்பட்டதால் இந்தோனேசியாவிலிருந்து கோழிகளை இறக்குமதி செய்ய திட்டமிட்டது.தற்போது சுற்றுச்சூழல் அமைச்சர் Grace Fu ,கோழி ஏற்றுமதித் தடை எப்போது முடிவுக்கு வரும் என்பதற்கு மலேசியாவிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்ற சந்திப்பில்,கோழி ஏற்றுமதித் தடை எப்போது மறுஆய்வு செய்யப்படும் என்பது தொடர்பான தகவல்கள் ஏதும் மலேசிய அதிகாரிகளிடம் இருந்து சிங்கப்பூர் உணவு அமைப்பிற்கு வந்ததா என்று நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸ் யாம் கேட்டார்.அதற்கு அமைச்சர் Fu “இல்லை” என்று பதிலளித்தார்.
மேலும்,உணவு விநியோகத்தில் இடையூறுகளைத் தவிர்க்க சிங்கப்பூர் பல்முனை அணுகுமுறையைப் பின்பற்றினாலும் ,மோசமான வானிலை,அரசியல் பதற்ற நிலைகள்,அயல்நாட்டு அரசாங்கங்களின் கொள்கை முடிவுகள் போன்றவற்றால் ஏற்படும் இடையூறுகளைச் சிங்கப்பூரால் முழுமையாக தடுக்க இயலாது என்று கூறினார்.
உணவு விநியோகம் தொடர்பான எல்லா இடர்களையும் நீக்க இயலாது.உணவுப்பொருள்களின் விலை ஏற்ற இறக்கத்திலிருந்து சிங்கப்பூர் மட்டும் தனித்து நிற்க இயலாது என்று கூறினார்.போதுமான அளவு உணவு உற்பத்தித் திறன் கொண்ட நாடுகள் கூட ,உரம்,தீவனம்,போக்குவரத்து போன்றவற்றுக்கான கூடுதல் செலவுகளால் சமீபகாலமாக விலை ஏற்ற இறக்கத்தை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
மலேசியாவிடமிருந்து சிங்கப்பூருக்கான கோழி இறக்குமதி 34 சதவீதமாகும்.பெரும்பாலும் உயிருள்ள கோழிகளே சிங்கப்பூருக்கு அனுப்பிவைக்கப்படும்.ஆஸ்திரேலியா,தாய்லாந்து,பிரேசில்,போன்ற நாடுகளிலிருந்து உறைந்த கோழி இறைச்சிகளை சிங்கப்பூர் இறக்குமதி செய்கிறது.
இந்நிலையில் உள்ளூர் கோழி விநியோகங்களில் இழப்பு ஏற்படும் முன் சிங்கபூருக்கு விதிக்கப்பட்டுள்ள கோழி ஏற்றுமதித் தடையை நீக்கும்படி ஜோஹோர் கோழிப்பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.