நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தொழில் சார்ந்து அடிக்கடி வெளிநாடு செல்லக் கூடியவர் விசாகன். அப்படி சமீபத்தில் லண்டன் சென்றிருக்கும் போது, விசாகனின் சூட்கேஸ் லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் திருடப்பட்டுள்ளது. அதில் பாஸ்போர்ட், பணம் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் இருந்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹீத்ரூ விமான நிலையத்தில், விமானத்திலிருந்து இறங்கி வந்த விசாகன் தனது பாஸ்போர்ட்டை எடுப்பதற்காக சூட்கேசை தேடியுள்ளார். அப்போது அது திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதனால் கணவன்-மனைவி இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவர்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் விமான நிலைய அதிகாரியிடம் இது குறித்து புகாரளித்தனர். புகாரை பதிவு செய்த அதிகாரிகள் விசாகன் – செளந்தர்யாவை விமான நிலையத்தில் உள்ள ஓய்வு அறையில் தங்க வைத்தார்கள். பின்னர் இதுபற்றி இந்திய தூதரகத்துக்கு தெரியவந்தது. தூதரக அதிகாரிகள் உடனடியாக விமான நிலையத்துக்கு வந்து விசாகன்-செளந்தர்யாவிடம் விசாரித்தார்கள்.
அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு இந்திய தூதரக அதிகாரிகள் டூப்ளிக்கேட் பாஸ்போர்ட்டை அளித்தனர். அது விமான நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பின், செளந்தர்யாவும், விசாகனும் வெளியே வந்தார்கள். அதோடு இந்த விஷயம் ரஜினிகாந்துக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக லண்டனில் உள்ள தனது நண்பர்களை தொடர்பு கொண்டு மகளுக்கும், மருமகனுக்கும் உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
தவிர, விசாகன் அளித்த புகாரின் அடிப்படையில் சூட்கேஸை திருடியது யார் என்று தீவிர தேடுதலில் இறங்கியிருக்கிறார்கள் லண்டன் போலீஸார்.