அடேங்கப்பா..! துரியன் பழத்தில் இவ்ளோ நன்மைகள் இருக்கா?

 

சிங்கப்பூரில் துரியன் பழம் மிகவும் பிரபலமான பழமாக உள்ளது. இந்தப் பழம் மிகுந்த இனிப்பு சுவையைக் கொண்டுள்ளது. இந்த துரியன் பழத்தைச் சாப்பிட்டால், உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வெறும் பழங்கள் மட்டுமின்றி, துரியன் மர இலைகளும் பல விஷேஷ மருத்துவக் குணங்களை தன்னாகத்தே கொண்டுள்ளது. அதே சமயம், சில நேரங்களில் இப்பழங்களை சாப்பிட்டால், உடலில் நோய்கள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது என்ற கருத்தும் மக்களிடையே உள்ளது. துரியன் பழத்தால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? விரிவாகப் பார்கலாம்.

“துரியோ ஜெபித்னஸ்’ என்ற அறிவியல் பெயர் கொண்ட துரியன் பழங்கள், தாய்லாந்து, பர்மா, வியட்நாம், சுமத்ரா, போர்னியோ, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் சிலி ஆகிய நாடுகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றது. இந்தப் பழம், மரத்தில் இருக்குபோதே பழுத்து கீழே விழுந்துவிடும். துரியன் மரம் 120 அடி (தோராயமாக 36.6 மீ) வரை வளரக்கூடியது. துரியன் பழம், 20 முதல் 35 செ.மீ நீளமும், 18 முதல் 22 செ.மீ விட்டமும் கொண்டது. மரத்தில் இந்தப் பழம் பழுக்கத் தொடங்கியதும், ஒரு அழுகிய முட்டையின் வாடை சுற்றம் எங்கும் பரவத் தொடங்குகிறது. இதனால், பலர் இந்தப் பழத்தை உண்டாலும் இதன் வாடையைக் கண்டு அருவருப்பு அடைகின்றனர். இதற்கு நேர் மாறாக, இந்தப் பழத்தை விரும்பி உண்ணும் சிலர், இதன் சுவை சொர்க்கத்திலும் கிடைக்காது. துரியன் பழம் பூமியின் அமிழ்தம் என ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

ஒருமுறை சாப்பிட்டுவிட்டால் போதும், நாக்கிலே தங்கிவிடும் துரியன் பழத்தின் சுவை. சுவை மட்டுமல்ல, சத்துப் பொருட்களும் துரியன் பழத்தைப் பிரபலமாக்கி உள்ளன. இதில் கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, கால்சியம், மாங்கனீசு, ரிபோப்ளேவின், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் நியாசின், புரதம் என எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. துரியன் பழத்தில் மாங்கனீசு அதிகம் இருப்பதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கிறது. இதனால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு பெரும் வரப்பிராசாதமாய் இருந்து வருகிறது. ஒற்றைத்தலைவலி நோயால் அவதிப்படுபவர்களுக்கும் இது சிறந்த தீர்வாக இருந்துவருகிறது.

மது, புகை மற்றும் போதைப் பழக்கங்களால் உடல்நிலை வலுவிழந்தவர்கள், துரியன் பழத்தை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால், இழந்த சக்தியை மீண்டும் பெறமுடியும் எனக் கூறப்படுகிறது. துரியன் பழத்தில் இருக்கும் ‘இண்டோல்’ எனும் ரசாயனப் பொருள், கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. திருமணம் ஆகி நீண்ட நாட்களாகியும் கருத்தரிக்காத பெண்களுக்கு துரியன் பழம் சிறந்த நிவாரணியாகச் சொல்லப்படுகிறது. பெண்களின் “ஈஸ்ட்ரோஜென்’ என்ற ஹார்மோன் சுரப்பியை இப்பழங்கள் தூண்டுவதன் மூலம், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளதாக கூறப்படுகிறது அதேபோல, மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இம்மரத்தின் இலைகளை வெந்நீரில் போட்டுக் குளித்தால், மஞ்சள் காமாலை நோய் குணமாகும் எனக் கூறுகின்றனர் அறிவியல் வல்லுனர்கள்.

துரியன் பழத்தில் உள்ள விட்டமின் பி, பொட்டாசியம், கால்சியம் ஆகியவை, மூட்டுகளையும், எலும்புகளையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. மேலும், இப்பழத்தில் உள்ள இரும்புச் சத்து, போலிக் ஆசிட் ஆகியவை அதிக அளவு இருப்பதால், ரத்தச் சோகையை குணமாக்கலாம். இந்தப் பழத்தில் உள்ள வைட்டமின் சி சத்தால், முதுமைத் தோற்றத்தை முழுதாக தடுக்கலாம். முக்கியமாக தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தைராய்டு சுரப்பி சீராக இயங்க உதவும். இப்படி மருத்துவ குணமும் சுவையும் கலந்து சிங்கை மக்களை வசீகரித்துள்ளது துரியன் பழம்.

இனி துரியன் பழங்களைச் சாப்பிடும்போது அதன் பலன்களையும் நினைத்துக்கொண்டே சாப்பிடுங்கள்.