2013 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் கலவரம் நடந்தது தொடர்பாக செய்திகளையும், காணொளிகளையும் ஏற்கனவே பார்த்து இருப்பீர்கள்.
லிட்டில் இந்தியா கலவரம் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதியன்றுநடந்தது. சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் சிங்கப்பூர் நேரப்படி இரவு 21:23 அன்று இக்கலவரம் நடைபெற்றது. வாகன விபத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இக்கலவரம் தொடங்கியது.
ரேஸ் கோர்ஸ் சாலை மற்றும் ஹேம்ஸ்பியர் சாலை சந்திப்பில் நடைபெற்ற இக்கலவரத்தில் சுமார் 400 வெளிநாட்டு ஊழியர்கள் ஈடுபட்டனர். இக்கலவரத்தில் பேருந்து ஒன்றும் emergency vehicle ஒன்றும் தாக்கப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரம் இக்கலவரம் நடைபெற்றது. சிங்கப்பூரின் சுதந்திரத்திற்குப் பின் நடைபெற்ற இரண்டாவது கலவரம் ஆகும். முதல் கலவரம் 1969 ஆம் ஆண்டு நடைபெற்றது.
லிட்டில் இந்தியாவில் இந்தியத் தொழிலாளி சக்திவேல் குமாரவேலு மது அருந்திவிட்டு பேருந்தில் ஏறும் போது தவறி விழுந்து மரணம் அடைந்தார். இவர் இந்தியாவின் புதுக்கோட்டை மாவட்டத்தின் அரிமளத்திலுள்ள ஓணன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். சக்திவேல் குமாரவேலு மது அருந்தியிருந்தார் என சிங்கப்பூர் காவல் துறையினர் உறுதிபடுத்தியுள்ளனர்
இரண்டு மணி நேரம் நடந்த இக்கலவரம் நள்ளிரவுக்குப் பின் முடிவுக்கு வந்தது. கலவரத்தின் போது மதுக் குப்பிகளை கலவரக்காரர்கள் வீசி எறிந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். சிங்கப்பூரின் சிறப்புப் படைப் பிரிவு இக்கலவரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர். இக்கலவரத்தின் போது 25 அவசர வாகனங்கள் சேதமுற்றன. மேலும் 5 வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
இணையத்தில் பதிவேற்றப்பட்ட காணொளிகளில் கலவரக்காரர்கள் காவல்துறை வானங்களை தலைகீழாய் புரட்டினர். கலவரத்தைக் கட்டுப்படுத்த வந்த காவல்துறை அதிகாரிகள் காயமுற்றனர். இக்கலவரத்தைக் கையாள 300 காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
சிங்கப்பூரில் கடுமையான விதிமுறைகள் உண்டு என்பது எவருக்கும் தெரியும். நன்கு தெரிந்த, இங்கேயே உள்ள தொழிலாளர்கள் எப்படி இது போல வன்முறையில் இறங்கினார்கள் என்பது தான், பலரின் வியப்பு கலந்த அதிர்ச்சியாக உள்ளது.