தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் ஆசிய தடகளப் போட்டி, கடந்த ஜூலை 12- ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில், ஜப்பான், சீனா, இந்தியா, இலங்கை, கத்தார், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா, குவைத், ஈரான், சவூதி அரேபியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் கலந்து கொண்டனர்.
நிறைவு நாளான ஜூலை 16- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த பெண்களுக்கான 200 மீட்டர் தடகளப் போட்டியில் கலந்து கொண்ட சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி பெரேரா (Shanti Pereira), சுமார் 22.70 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கம் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். அதில், இந்தியா, சீனா வீராங்கனைகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.
முன்னதாக, ஜூலை 14- ஆம் தேதி நடந்த 100 மீட்டர் போட்டியில் கலந்து கொண்ட சாந்தி பெரேரா தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய தடகளப் போட்டியில் சாந்தி பெரேரா இரண்டு தங்கப் பதக்கத்தை வென்று சிங்கப்பூருக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“சிங்கப்பூர் அரசுமுறைப் பயணம் மிகவும் உபயோகமாக அமைந்தது”- தமிழக அமைச்சர் பெருமிதம்!
தங்கமங்கை சாந்தி பெரேராவுக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். ஆசிய தடகளப் போட்டியில் சிங்கப்பூர் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு பதக்கங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.