ஆகஸ்ட் 29 முதல் பெரும்பாலான இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை. பள்ளிகளிலும் இனி மாணவர்கள் முகக்கவசங்கள் அணியத் தேவை இருக்காது.
அத்தியாவசிய சேவைகள் வழங்கப்படும் கூட்டம் அதிகமாக இருக்கும் உட்புறங்கள், அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடியவர்கள் அடிக்கடி வந்துபோகும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும்.
மருத்துவமனைகள், மருந்தகங்கள், தாதிமை இல்லங்கள், அவசரகால வாகனகங்கள் போன்ற பொதுச் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் பேருந்துகள், எம்ஆர்டி, எல்ஆர்டி, உள் போக்குவரத்து முனையங்கள் போன்ற பொதுப்போக்குவரத்திலும் முகக்கவசம் அணிவது தொடர்ந்து கட்டாயம் ஆக்கப்படும்.
தனியார் பேருந்துகள், பள்ளிப் பேருந்துகள், டேக்சிகள் போன்ற தனியார் போக்குவரத்துகளில் முக்கக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை.
விமான நிலையங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும் விமானங்களில் தொடர்ந்து முகக்கவசம் அணியவேண்டும்.
இனிமேல் தனிப்பட்ட பாதுகாப்பு இடைவெளி தேவை இல்லை. அனைத்து ஊழியர்களும் வேலையிடத்துக்குத் திரும்பலாம். குழுவாகக் கூடும் எண்ணிக்கையிலும் இனி கட்டுப்பாடுகள் இருக்காது.
எனினும் வர்த்தகங்கள் பாதுகாப்பு கருதி தங்கள் வேலையிடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயம் ஆக்காலாம் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் கூறினார்.
முகக்கவசங்கள் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும் முடிந்தவரை குறிப்பாக கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் தொடர்ந்து முகக்கவசங்கள் அணியும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.