எதிர்வாரும் மே 29 ஆம் தேதியிலிருந்து அச்சிடப்பட்ட வடிவில், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படமாட்டாது. பதிவு செய்யும் முறைகளை எளிமைப்படுத்த இது போன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஐ.சி. ஏ தெரிவித்துள்ளது.
சான்றிதழ்கள் அச்சிடப்பட்ட வடிவில் வழங்கப்படுவதற்கு பதிலாக டிஜிட்டல் சான்றிதழ்கள் வழங்கப்படும். இனி நேரடியாகச் சென்று பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இம்மாதம் 29ஆம் தேதி முதல் ‘LIFESG’ என்ற செயலி அல்லது இணையத்தளம் வாயிலாக குழந்தைகளின் பிறப்பைப் பதிவுசெய்யலாம். பிறகு டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யுமாறு பெற்றோருக்கு உடனடியாகத் தகவல் அனுப்பப்படும்.
தகவல் வந்த பிறகு 90 நாள்களுக்குள் பெற்றோர் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யலாம். சான்றிதழை கைபேசி போன்ற சாதனங்களில் வைத்துக்கொள்ளலாம்.
தற்போதைய சூழலில் குழந்தைகள் பிறந்த மருத்துவமனை அல்லது குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தில் பிறப்பு, இறப்பு பதிவுசெய்யவேண்டும் என்ற நிலை உள்ளது.
பிறப்பு பதிவை போலவே ஒருவரின் மரணத்தைப் பதிவுசெய்யும் முறையையும் எளிமைப்படுத்தி வருகிறது. மே 29ஆம் தேதியிலிருந்து யாரேனும் மரணமடைந்தால் மருத்துவர் ஒருவர் இணையம்வழி இறப்புச் சான்றிதழை வழங்குவார். இது, தானாகவே குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தின் பதிவகத்தில் சேர்க்கப்படும்.
இறப்புச் சான்றிதழின் எண்ணை அந்த மருத்துவரிடமிருந்து பெற்றுக்கொண்ட பிறகு, சான்றிதழை ‘மை லெகசி’ எனும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இறப்பைப் பதிவுசெய்ய கட்டணம் கிடையாது.
சான்றிதழ்களில் உள்ள ‘QR’ குறியீட்டைக் கொண்டு அரசாங்க அமைப்புகளும் தனியார் நிறுவனங்களும் அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.