மலேசியா உயிருள்ள பிராய்லர் கோழிகளை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்ய தற்காலிக தடை விதித்திருந்தது.நாளை அக்டோபர் 11-ஆம் தேதி முதல் இந்த தற்காலிகத் தடை நீக்கப்படுகிறது என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.
மலேசியாவின் கால்நடை சேவைத்துறை தடை நீக்கம் பற்றி தங்கள் அமைப்பிடம் உறுதிப்படுத்தியதாக கூறியது.தடை நீங்கி சிங்கப்பூருக்கு உயிருடன் கோழிகள் வருவதை வரவேற்பதாகவும் மேலும் தகவல்களை நாடுவதாகவும் அமைப்பு குறிப்பிட்டது.
கடந்த ஜூன் மாதம் முதல் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு அனுப்பப்படும் கோழி ஏற்றுமதிக்கு மலேசிய அரசாங்கம் தடை விதித்திருந்தது.இதனால் கோழி விநியோகம் பாதிப்படைந்தது.
சிக்கலைச் சமாளிக்க இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூர் கோழிகளை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்தது.மேலும் ஜூன் மாத நடுப்பகுதியில் சில வகை கோழிகளை மட்டும் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டது.
உணவுப்பொருள் விநியோகத்தில் இடையூறு ஏற்படும்போது பன்மய அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்.இத்தகைய நடவடிக்கை நம்மைப் பாதுகாத்துக்கொள்ள உதவும் என்று உணவு அமைப்பு கூறுகிறது.
விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ள போது பொதுமக்களுள் அவர்களது விருப்ப உணவுகளை குறிப்பிட்ட காலத்திற்கு விட்டுக்கொடுத்து இருந்தால்,உணவு விநியோகத்தில் சிங்கப்பூர் மீள்திறனுடன் திகழ அது உதவும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.