“சனிக்கிழமைகளில் மட்டும் இந்த பேருந்து நிறுத்ததைத் தவிர்க்கும்”- எஸ்.பி.எஸ். போக்குவரத்து நிறுவனம் அறிவிப்பு!

Photo: SBS Transit Ltd Official Facebook Page

 

சிங்கப்பூரில் ரயில் மற்றும் பேருந்து ஆகிய பொதுப்போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகிறது எஸ்.பி.எஸ். போக்குவரத்து நிறுவனம் (SBS Transit Ltd).

 

இந்த நிலையில் சிங்கப்பூரின் தேசிய தினம் வரும் ஆகஸ்ட் மாதம் 9- ஆம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது. தேசிய தினத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்து வருகிறது. மற்றொரு புறம் தேசிய தின அணி வகுப்புக்கான ஒத்திகை தற்போது நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக முக்கிய சாலைகளில் பேருந்து போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் எஸ்.பி.எஸ். போக்குவரத்து நிறுவனம், பேருந்து சேவைகள் தொடர்பாக நேற்று முன்தினம் (02/07/2021) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

அதன்படி, எஸ்.பி.எஸ். போக்குவரத்து நிறுவனம் (SBS Transit Ltd) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தேசிய தின அணி வகுப்புக்கான ஒத்திகை 2021, ஜூலை 3- ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக மூன்று சனிக்கிழமைகளில் நடைபெறுவதன் காரணமாக, 56, 70M, 111, 133, 162M, 195 ஆகிய ஆறு பேருந்து சேவைகளில் ராஃபிள்ஸ் அவென்யூ சாலையில் (Raffles Avenue) ‘தி ஃபுளோட் @ மரீனா பே’ (The Float @ Marina Bay- Bus Stop Code: 02051) என்ற பேருந்து நிறுத்தத்தைத் தவிர்க்கும். 03/07/2021 முதல் 17/07/2021 வரை ஒவ்வொரு வார சனிக்கிழமையிலும் காலை 11.00 AM மணி முதல் இரவு 08.00 PM மணி வரை, இந்த புதிய அறிவிப்பு நடைமுறையில் இருக்கும். எனவே, இதனை கவனத்தில் கொண்டு உங்கள் பயணத்தைத் திட்டமிடுங்கள்” என்று பயணிகளை போக்குவரத்து நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.