சுங்கவரி மற்றும் பொருள் சேவை வரி செலுத்தாமல் மோசடி செய்து சிகரெட்டுகளை சேகரித்து வைத்திருந்த குற்றத்திற்காக 63 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பொதுவாக கப்பல்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சிகரெட்டுகளுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அவர், கப்பல்களுக்கு விற்பதாகக் கூறி கூடுதலாக சுங்க வரி செலுத்தாத சிகரெட்டுகளை கொள்முதல் செய்தார்.
அதனை முறைகேடாக பெற்று, வெளி இடங்களில் விற்று வந்தார். அளவுக்கு அதிகமாக சில சிகரெட் பெட்டிகளை சேகரித்து வைத்திருந்தார்.
கப்பல்களுக்குத் தேவையான சிகரெட்டுகளைவிட கூடுதலாக சிகரெட்டுகளை பலமுறை வாங்கியதை சிங்கப்பூர் சுங்கத் துறை அறிந்துகொண்டு அறிக்கை வெளியிட்டது.
இதனை தொடர்ந்து சுங்கத் துறை அதிகாரிகள், அவரது இடத்தை சோதனையிட்டபோது வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கண்டுபிடித்தனர்.
சுமார் 14 முறை ஏற்றுமதி அனுமதி பெற்று சிகரெட்டுகளை வெளி சந்தையில் விற்றது தெரிய வந்தது.
வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை சேமித்து வைத்த குற்றச் சாட்டையும், வரி ஏய்ப்பு செய்த ஒன்பது மோசடிக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டார். மொத்தம் பத்து குற்றச் செயல்களில் 68,000 வெள்ளிக்கு அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.