எரிபொருள் வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபட்டைக் கட்டுப்படுத்த மின்சார வாகனங்களுக்கு பல்வேறு நாடுகளும் திரும்புகின்றன.தற்போது மின்வாகனங்கள் தொடர்பான ஒத்துழைப்பைப் பலப்படுத்த சிங்கப்பூரும் மலேசியாவும் இணங்கியுள்ளன.
ஜோஹோரில் நடைபெற்ற ஒரு சந்திப்பில் அந்த இணக்கம் ஏற்பட்ட நிலையில் நடைப் பயிற்சியாளர்களும் மிதிவண்டி ஓட்டிகளும் எல்லை கடந்து சென்று வர உதவும் வசதிகளை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.
ஆகஸ்ட் 11 அன்று இஸ்கந்தர் மலேசியாவுக்கான மலேசியா-சிங்கப்பூர் கூட்டு அமைச்சர் நிலை குழு 15-ஆவது முறையாக சந்தித்தது.இந்த சந்திப்பையொட்டி சிங்கப்பூரின் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மன்ட் லீயும் மலேசிய பிரதமர் அலுவலக அமைச்சர் முஸ்தபா முகம்மதுவும் இஸ்கந்தர் மலேசியாவில் சந்தித்தனர்.
போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன்,ஜோஹோர் மாநில முதல்வர் காஷி மற்றும் இரு நாடுகளின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.சுமார் 4.2 கி.மீ. தொலைவுள்ள ஜோஹோர் கடற்பாலத்தில் சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சரும் ஜோஹோர் முதல்வரும் மிதிவண்டி ஓட்டிச் சென்றனர்.மேலும் உள்ளூரில் ஒரு காப்பிக்கடையில் சாப்பிட்டனர்.