யூனோஸ் (Eunos) பகுதியில் உள்ள ஜீப்ரா கிராசிங்கில் ஏப்ரல் 16ஆம் தேதி அன்று சைக்கிள் மீது லாரி மோதியதில் 64 வயதுமிக்க ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
முகநூலில் பகிரப்பட்ட புகைப்படங்கள் வாயிலாக, சம்பவ இடத்தில் துணை மருத்துவர்கள் உதவியில் ஈடுபடுவதை காணலாம். அருகிலேயே சைக்கிள் ஒன்று சேதமடைந்து சாலையில் கிடப்பதை காண முடிகிறது.
அன்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் பான் தீவு விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் ஜலான் யூனோஸ் சாலையில் நடந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
அதன் பின்னர் மயக்கமடைந்த அந்த ஆடவர் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விபத்தில் சிக்கிய சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்தார் என்றும், மருத்துவமனையில் அவரின் உயிர் பிரிந்ததாகவும் போலீசார் zaobao.com.sg இடம் தெரிவித்தனர்.
சைக்கிள் ஓட்டி ஹெல்மெட் அணியாமல் இருந்தார் எனவும், விபத்தின் ஏற்பட்ட பின்னர் ரத்தம் தரை பகுதியில் வழிந்தோடியதாகவும் நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய, 27 வயதான லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.