சிங்கப்பூர் நீர்ப்பகுதியில் கப்பல் டேங்கரில் தீ விபத்து, கப்பலில் இருந்தவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
சிங்கப்பூர் நீர்ப்பகுதியில் நேற்று வியாழக்கிழமை (நவ. 7) பனாமா கொடியிடப்பட்ட டேங்கரில் தீ விபத்து ஏற்பட்டதால், அதில் இருந்த குழு உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர், என்று சிங்கப்பூர் கடல் மற்றும் துறைமுக ஆணையம் (MPA) அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பெட்ரா பிரான்காவிலிருந்து வடகிழக்கில் 9.7 கடல் மைல் தொலைவில் HOYU என்ற டேங்கரில் தீ விபத்து ஏற்பட்டதாக மதியம் 1.10 மணியளவில் தகவல் கிடைத்ததாக எம்.பி.ஏ. தெரிவித்துள்ளது. மேலும், சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை, சிங்கப்பூர் போலீஸ் கடலோர காவல்படை மற்றும் சிங்கப்பூர் கடற்படை ஆகியவை, HOYU குழுவினருக்கு உதவ கப்பல்களை அனுப்பினர்.
பிலிப்பீன்ஸை நோக்கி சென்றுகொண்டிருந்த கப்பலில் எண்ணெய் சரக்கு இருந்ததாக Reuters கூறியுள்ளது.
இந்நிலையில், கப்பலிலிருந்த 18 ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுத் தீ அணைக்கப்பட்டதாக கடல்துறை, துறைமுக ஆணையம் கூறியுள்ளது.
இந்த தீ விபத்து தொடர்பாக துறைமுக ஆணையம் (MPA) விசாரணை நடத்தி வருகிறது.