இந்தியாவில் டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மட்டுமே அமெரிக்காவுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் அமெரிக்காவுக்கு நேரடி விமான சேவை இல்லாத நிலையில், துபாய், கத்தார் (அல்லது) லண்டன், சிங்கப்பூர் வழியாக செல்லும் விமானங்களிலே பயணிகள் பயணம் செய்து வந்தனர்.
இதனைக் கருத்தில் கொண்டு கடந்த 2021- ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பெங்களூருவில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவையை டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியது. ஆனால், கொரோனா காரணமாக, இந்த வழித்தடத்தில் போதிய வரவேற்பு இல்லை எனக் கூறி, கடந்த மார்ச் மாதம் அந்த விமான சேவை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், இரு சிலிகான் சிட்டிகளுக்கு இடையேயான நேரடி விமான சேவை மீண்டும் தொடங்க வேண்டும் என அண்மைக் காலமாக பல்வேறு தரப்பினரும் கோரி வந்தனர். அதைத் தொடர்ந்து, வரும் டிசம்பர் 2- ஆம் தேதி அன்று முதல் பெங்களூரு- சான் பிரான்சிஸ்கோ இடையே நேரடி விமான சேவையைத் தொடங்குவதாக டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்திருக்கிறது.
வாரத்தில் மூன்று முறை இந்த வழித்தடத்தில் விமான சேவை வழங்கப்படும் எனவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏர் இந்தியா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.