சிங்கப்பூரில் பணிபுரியும் 36 வயதான வெளிநாட்டு ஊழியர், VTL ஏற்பாட்டின்கீழ் சொந்த நாட்டுக்கு புறப்பட இருந்த அதே நாளில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 24 அன்று, தெம்பனீஸ் சாலை விபத்தில் அந்த ஊழியர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வெல்டிங் தொழில்நுட்ப ஊழியரான முகமது சைஃப்புல், தெம்பனீஸ் அவென்யூ 1ல் அன்று அதிகாலை 2 மணியளவில் விபத்தில் சிக்கி இறந்தார் என்று ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.
விபத்து ஏற்பட்ட நேரம் மழை பெய்து கொண்டிருந்ததால் அவரின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. அதாவது சாலையைக் கடக்க முயன்ற 72 வயது முதியவரை அவர் தவிர்க்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த சைஃப் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், முதியவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
VTL டிக்கெட்
மலேசியாவுக்குத் திரும்புவதற்கு VTL டிக்கெட்டை மற்றும் ART சோதனை முடிவையும் அவர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
“அந்த டிக்கெட்டில் அவர் 24ஆம் தேதி மலேசியாவுக்கு பயணிப்பதும் தெரியவந்தது.”
அன்று நள்ளிரவு இந்த விபத்து தொடர்பாக 1.45 மணிக்குப் பிறகு உதவி வேண்டி அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
விவாகரத்து பெற்ற அவர், ஐந்து ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றியதாக நியூ பேப்பர் செய்தி வெளியிட்டுள்ளது.