தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி சிங்கப்பூரில் பணிபுரியும் சுமார் 100 வெளிநாட்டு ஊழியர்களுக்கு வாழை இலை விருந்து வைக்கப்பட்டது.
அதாவது லிட்டில் இந்தியாவில் உள்ள ஸ்ரீ வீரகாளியம்மன் ஆலயத்தில் நேற்று அவர்களுக்கு விருந்து உபசரிப்பு சிறப்பாக நடைபெற்றது.
PPT Lodge 1B, avery lodge ஆகிய ஊழியர் தங்கும் விடுதிகளை சேர்ந்த சுமார் 100 ஊழியர்களுக்கு ஆலயத்தின் பலநோக்கு மண்டபத்தில் வாழை இலை விருந்து சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 2 ஆண்டுகளாக விடுதியில் அடைபட்டு இருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தற்போது தான் சில கட்டுப்பாடுகளுடன் வெளியே செல்ல தொடங்கியுள்ளனர்.
இதனை ஊழியர்களுக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த, ’18 ஸ்டெப்ஸ்’ என்ற சேவை குழு அவர்களுக்கு விருந்தளித்து மகிழ்வித்தது.
சிங்கப்பூரின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு புத்தாண்டு உணர்வை கொண்டு வந்து அவர்களை மகிழ்ச்சி படுத்துவது எங்களுடைய கடமை என்று அதன் இணை நிறுவனர் தேவராஜ் ‘தமிழ் முரசி’டம் கூறினார்.
இதில், திருவாரூர் மற்றும் ராமநாதபுரம் பகுதிகளை சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
“மூன்றாண்டுக்கு பிறகு இன்று தான் வாழை இலையில் வயிறார சாப்பிட்டேன்” என்று திருவாரூர் ஊழியர் மணிகண்டன் கூறினார்.