முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையே கோவிட்-19 சோதனைகள் இல்லாமல், அனைத்து போக்குவரத்து முறைகள் வழியாகவும் ஏப். 1 முதல் நில எல்லைகளை கடந்து செல்ல முடியும்.
கோவிட்-19 பரவல் எதிரொலியாக அவசரகால நடவடிக்கைகளின் பேரில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எல்லைகள் மூடப்பட்டது.
இறுதியாக தற்போது சிங்கப்பூரில் உள்ள மலேசியர்கள் பலர் தங்கள் குடும்பங்களை காண எளிதாக வீடு திரும்ப வழிவகை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று ஏப். 1 அன்று எல்லையைத் தாண்டிய மலேசியர்கள் பலர் தங்கள் தாய்நாட்டிற்குள் நுழைந்தபோது ஆரவாரம் செய்தும், கூச்சலிட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக அதில் ஒருவர் மட்டும் ஜோகூரில் உள்ள சாலையில் அமர்ந்து உணர்ச்சிவசப்பட்டு, தாம் வீடு திரும்பும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அந்த மலேசிய ஆடவரின் இந்த உணர்ச்சிகாரமான காட்சியை அவரது மனைவி டிக்டோக்கில் பதிவேற்றினார்.
அதில் அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக நெற்றியை தரையில் தொட்டு சாலையில் விழுந்து அழுது வணங்குவதை காண முடிகிறது.
இதுபோல பல வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் இன்னமும் சிங்கப்பூரில் தவித்து வருகின்றனர்.