அடிமேல் அடி! இனி அது சரிப்பட்டு வராது – சிங்கப்பூர் தப்பி ஓட தயாரான அரசியல் புள்ளி!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா உதவிக்கரம் நீட்டி வருகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சூழலில், ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 9ந்தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார்.

இந்நிலையில், கோத்தபாய தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு ராணுவ விமானத்தில் தப்பி சென்று விட்டார் என தகவல் வெளியானது.

இந்நிலையில், இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை, கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின.

இதனை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை முன்னிட்டு நெருக்கடி நிலை உத்தரவை பிறப்பித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, நாட்டின் மேற்கு மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பித்து உள்ளார்.

பிரதமர் இல்லத்திற்கு வெளியே குவிக்கப்பட்ட பாதுகாப்பு படையினர் கூட்டத்தினரை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.

இந்நிலையில், மாலத்தீவுக்கு குடும்பத்துடன் தப்பி சென்ற கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவில் இருந்தபடியே சிங்கப்பூருக்கு இன்று செல்ல இருக்கிறார் என்று அந்நாட்டில் இருந்து வெளிவரும் டெய்லி மிர்ரர் தகவல் வெளியிட்டு உள்ளது.