விநாயகர் சதுர்த்தியையொட்டி, செப்டம்பர் 19- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ செண்பக விநாயகர் கோயிலில் அதிகாலை 04.00 மணிக்கு ஸ்ரீ செண்பக விநாயகருக்கு கணபதி ஹோமமும், காலை 06.30 மணிக்கு மூலவருக்கு 1008 சங்காபிஷேகமும் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்திய பால் குடங்களைக் கொண்டு விநாயகருக்கு பால் அபிஷேகம் மற்றும் இளநீர், மஞ்சள் உள்ளிட்டவைகளாலும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை காட்டப்பட்டது.
சிறப்பு பூஜைகளும், சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது, இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.
பின்னர், மேளதாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட உற்சவர் சிலை ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது.
முன்னதாக, ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழங்கள், கொய்யா, திராட்சை உள்ளிட்ட பழங்களும், முறுக்கு, அதிரசம் ஆகிய பலகாரங்களும், அரளி, அருகம்புல், சம்மங்கி, சாமந்தி உள்ளிட்ட பல வகையான மலர்களும், விநாயகருக்கு தாம்பூலத்தட்டில் சீர்வரிசையாகக் கொண்டு வரப்பட்டிருந்தது.