புதிய பராமரிப்புத் திட்டமான “Healthier SG” என்ற நோய்த்தடுப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தி,செயல்படுத்த அடுத்த நான்கு ஆண்டுகளில் ஒரு பில்லியன் வெள்ளிக்கு மேல் செலவிடப்படும் என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
திட்டத்திற்குத் தயாராக தனியார் மருந்தகங்களுக்கு ஆதரவளித்தல்,புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல் போன்றவற்றிற்கு அத்தொகை செலவிடப்படும் என்றும் கூறினார்.
நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய அவர் சுமார் $400 மில்லியன் வரை வருடாந்திர சுகாதாரப் பரிசோதனைகள்,தனியார் மருத்துவர்களுக்கான சேவை கட்டணம் செலவிடப்படும் என்றார்.சுகாதார வரவுசெலவுத் திட்டத்தில் கிட்டத்தட்ட 6 சதவீதம் ஆண்டுதோறும் நோய்த்தடுப்பிற்காக செலவிடுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் ‘Healthier SG’ திட்டம் அமலுக்கு வந்த அடுத்த சில வருடங்களில் சுகாதாரப் பராமரிப்பிற்காக செலவிடும் தொகையை உயர்த்த விரும்புவதாக அவர் கூறினார்.நோயினால் அவதிப்படும் பொதுமக்களும் அவர்களுக்கு நெருக்கமானவர்களும் படும் துன்பத்தைக் குறைப்பதே இந்த செலவுகளின் நோக்கம் என்று அவர் கூறினார்.
நிதி முதலீடுகள் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தாது என்று குறிப்பிட்ட அவர்,எனினும் எட்டு பத்து வருடங்களில் அவற்றினால் ஏற்படும் தாக்கம் கண்கூடாகத் தெரியும் என்றார்.