சிங்கப்பூர் அயனமண்டல தட்பவெப்பநிலை உள்ள நாடாகும். ஆண்டு முழுவதும் வெப்பநிலையில் பெரிய மாறுதல்கள் இருக்காது.
அதிகளவு ஈரப்பதம், மழைப்பொழிவு இருக்கும். இந்தோனேசியாவில் காடுகளை எரிப்பதால் இங்கு வானம் மங்கலாக மூட்டத்துடன் காணப்படும்.
தற்போது அதிக வெப்பம் நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிவரை வெயில் கொளுத்தும் என்றும் செப்டம்பர் மாதம்வரை வறண்ட வானிலை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், வெப்பம் சார்ந்த உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
வெப்பத்தால் ஏற்படும் தடிப்பு, தசைவலி, சோர்வு, சொறி, கடும் வெப்பத்தாலும் நீர்ச்சத்துக் குறைவாலும் ஏற்படக்கூடிய சொறி, படை போன்றவற்றால் அதிகமானோர் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வெளிப்புறங்களில் வேலை செய்வோர் தலைவலி, உடற்சோர்வு, உடல்வலி, தலைச்சுற்றல், கவனக்குறைவு போன்றவற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
இவ்வாண்டு ஏப்ரல், மே மாதங்களில் வெப்பநிலை உச்ச அளவில் பதிவானது. வெப்பத்தின் தாக்கத்தைத் தவிர்க்க: தளர்வான, மெல்லிய, ஈரம் உறிஞ்சும் ஆடைகளையும் தொப்பியையும் அணியலாம்.
காலை 9 மணியில் இருந்து பிற்பகல் 4 மணிவரை வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்கலாம்.
நாளொன்றுக்குக் குறைந்தது இரண்டு லிட்டர் நீர் அருந்துங்கள். முடிந்த அளவிற்குச் சூடான உணவுகளையும் பானங்களையும் தவிர்க்கலாம்.
அதேபோல, அதிகச் சர்க்கரையும் மது அளவும் அதிகம் உள்ள பானங்களைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.