சிங்கப்பூரில் உள்ள புளோக் 308 ஹவ்காங் அவென்யூ 5- ல் (Block 308 Hougang Ave 5) உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், ஜூன் 25- ஆம் தேதி அன்று இரவு 07.30 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (Singapore Civil Defence Force- ‘SCDF’) மற்றும் காவல்துறையினர் ஆகியோருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, செங்காங் தீயணைப்பு நிலையத்தை (Sengkang Fire Station) சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்தனர். அதைத் தொடர்ந்து, அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் உள்ள வீட்டில் தீ கொளுந்து விட்டு எரிந்தததைப் பார்த்த தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பு உபகரணங்களுடன் 13வது மாடி சென்று, தீ விபத்து ஏற்பட்ட வீட்டிற்கு நுழைந்தனர்.
அப்போது, வீட்டின் படுக்கையறையில் தீ எரிந்துக் கொண்டிருந்ததைப் பார்த்த வீரர்கள், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர். எனினும், அந்த அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.
இந்திய ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டி, காதை கடித்து துப்பிய சக ஊழியருக்கு சிறை
இதனிடையே, தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், பாதிக்கப்பட்ட வீட்டில் இருந்தவர்கள் தாங்களாவே வெளியேறிய நிலையில், அண்டை வீடுகளில் இருந்த 10 பேர் குடியிருப்பாளர்கள் காவல்துறையினரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
அதேபோல், அண்டை வீடுகளில் இருந்த குடியிருப்பாளர்களை வெளியேற்ற உதவிய ஒரு வழிப்போக்கர் ஒருவர் புகையை சுவாசித்ததால் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு (Singapore General Hospital) கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், மின்கசிவுக் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கூறுகின்றனர்.