சிங்கப்பூரில் நீண்ட காலமாக குடியிருப்பு நெருக்கடி இருந்து வருகிறது.மேலும் வீட்டு வாடகைகளும் உயர்த்தப்பட்டுள்ளன.இந்நிலையில் பணத்தை மிச்சப்படுத்த மற்றவர்களுடன் சேர்ந்து வீட்டை வாடகைக்கு எடுத்து வசிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
அதிலும் பெரும்பாலான சிங்கப்பூரர்கள் இவ்வாறு வாடகைக்கு எடுத்து வசிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.சொத்துச் சந்தை நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வில் வீட்டு விலைகள் அதிகரித்து வருவதே இதற்க்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது.
ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பலர் அதில் வசிக்கும் போக்கு முன்னதாக அயல்நாட்டினரிடையே பரவலாக இருந்த நிலையில் சிங்கப்பூரர்களும் இறங்கி விட்டனர்.தற்போது சிங்கப்பூரர்களிடையே இது பிரபலமாகி வருவதாக கூறப்படுகிறது.
மற்றவர்களுடன் ஒரே வீட்டில் வசிக்கும் சிங்கப்பூரர்களின் விகிதம் 2021-ல் 25 சதவீதமாக இருந்தது.சொந்த வீடு வாங்குவதை விட மற்றவர்களுடன் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசிப்பது பணத்தை மிச்சப்படுத்தும் என்பதால் பெரும்பாலான சிங்கப்பூர் இளைஞர்கள் இதையே தேர்வு செய்கின்றனர்.
29 வயதிலிருந்து 33 வயதினர் வரை இவ்வாறு வசிப்பதில் விருப்பம் தெரிவிக்கின்றனர்.சில தம்பதியர் அவர்களது பிடிஓ வீடுகள் தயாராகும் வரை வீட்டை இவ்வாறு வாடகைக்கு எடுப்பதாகவும் கூறப்படுகிறது.வீட்டிலிருந்து வேலை பார்ப்பது அதிகமாகி விட்டது.
அலுவலகங்களுக்கு அதிகமாக செல்லாத நிலையில் மற்றவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள இளைஞர்கள் விரும்புகின்றனர்.இதனால் ஒரே வீட்டில் வசிப்பதை அவர்கள் வரவேற்கின்றனர்.இந்தப் போக்கிற்கு கொரோனா பரவலும் முக்கியக் காரணம் ஆகும்.