கணவனே மனைவியை பாலியல் தொழிலுக்கு அழைத்து கட்டாயப்படுத்துவதாக இளம்பெண் ஒருவர் தமிழ்நாட்டு காவல்துறையிடம் புகார் செய்துள்ளார்.
மனைவியை நிர்வாணமாக காணொளி எடுத்து, அதை தன்னுடைய நண்பர்களுக்கு போட்டுக்காட்டி பாலியல் தொடர்பாக பேரம் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் வேலை
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த ஐஸ்வர்யா (27) தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். நடனம் கற்றுக்கொண்ட அவர், 2017ம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் நடனப் பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார்.
மேலும், தற்போது ஐஸ்வர்யா ‘அபாய வளைவு’, ‘வழித்துணை காதலி’ போன்ற திரைப்படங்களில் நடன இயக்குனராகப் பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
திருமணம்
ஐஸ்வர்யாவிற்கும், அதே சிங்கப்பூரில் ஆட்டோமொபைல் பொறியாளராகப் பணிபுரிந்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த ஊழியர் அருண் (29 வயது) என்பவக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறி கடந்த 2019ம் ஆண்டு சொந்த ஊரான கடலூர் மாவட்டத்தின் முடசல் ஓடை கிராமத்தில் திருமணம் நடந்துள்ளது.
பின்னர், அருண் தனது மனைவியுடன் சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். அதனை அடுத்து, மீண்டும் சிங்கப்பூர் சென்றுள்ளார்.
பின்னர், சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த அருண் தனது மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு வற்புறுத்தி வந்துள்ளார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாண காணொளி
அதிர்ச்சியடைந்த மனைவி ஐஸ்வர்யா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார், தனது நண்பர்களிடம் மனைவியை விற்கவும் அருண் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
ஐஸ்வர்யா மீண்டும் சிங்கப்பூர் சென்று, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மீண்டும் கடலூர் திரும்பியுள்ளார். இந்நிலையில், மனைவி தூங்கும்போது ஆடையின்றி காணொளி எடுத்த அருண், அதை காண்பித்து ஐஸ்வர்யாவை மிரட்டியும் உள்ளார்.
தூக்க மாத்திரை கொடுத்து காணொளி எடுத்தது அம்பலம்
திருமணமான நாள் முதல் ஐஸ்வர்யாவிற்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து, ஆபாச காணொளிகளை அருண் எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.
புகார்
இதனால் மனமுடைந்து போன ஐஸ்வர்யா, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார்.
தன் கணவரிடம் இருந்து தன்னைக் காப்பாற்றுமாறும், பல பெண்கள் அவரின் கணவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.